தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வால் ஆட்சி அமைக்க முடியவில்லை.
இதற்கு ஆளுநர் தரப்பில் காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்புக் கொடுக்கும் வழிகாட்டல். எனவே, ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்க திமுக – அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் கசியவிடப்படுகிறது. ஆனால், தற்போதுவரை இரு கட்சிகளிடமிருந்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதாக மட்டும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தவெக ஒரு தற்காப்பு யுக்தி முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, ஒருவேளை திமுக – அதிமுக இணைந்து ஆட்சியமைக்க முயன்றால், தவெக-வின் 108 எம்.எல்.ஏ-க்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலகத் தயாராக இருக்க வேண்டும் என தவெக தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பாகி இருக்கிறது.

இந்த நிலையில்தான் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் தன் எக்ஸ் பக்கத்தில், “இரண்டு திராவிட கட்சிகள். வாழ்நாள் எதிரிகள். ஒரே இரவில் ஒன்றானார்கள். தமிழகத்திற்காக இல்லை. மதச்சார்பின்மைக்காக இல்லை. ஒரே ஒரு மனிதனை நிறுத்த. விஜய்யை. காங்கிரஸ் தெளிவாகப் பார்த்தது வெளியேறியது.
RSS/BJP-யின் B-டீமுடன் படுத்துக்கொண்டு உங்களை மதச்சார்பற்றவர் என்று சொல்ல முடியாது. “நிலையான அரசு” என்பது இரண்டு பயந்த கட்சிகள் தங்கள் அதிகாரத்தைக் காக்கும் அரசியல் மொழி. காங்கிரஸ் சரியாகவே வெளியேறியது. திமுக இன்று தன் முகமூடியை கழற்றுமா? Who is a betrayer?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





