2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தில் தொடர்ந்து இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு ‘எண்ட் கார்டு’ எழுதியுள்ளது பாஜக.
மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியிலேயே 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக சுவேந்து அதிகாரியிடம் தோல்வியைத் தழுவியுள்ளார்.
ஆனால், இப்போது திரிணாமுல் தோல்விக்கு பாஜக காரணம், சிறப்பு தீவிர திருத்தம் காரணம் என்று முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதில் முரண்டு பிடித்து வருகிறார் மம்தா.
அரசியலமைப்பு சாசனத்தின் படி, மம்தா முடிவுக்கு என்ன பதில் என்பதை பார்க்கலாம்.
அரசியலமைப்பு சாசனம் பிரிவு 164-ன் படி, சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் வரை, ஒருவர் முதலமைச்சராக இருக்கலாம்.
ஆனால், பெரும்பான்மையை இழக்கும் போது, அரசியல் சாசனத்தின் படி, அந்த ஆட்சி முடிவடைந்து விடுகிறது.
அதன் பிறகு, பெரும்பான்மை இருக்கும் நபரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில், அமைச்சர்களை ஆளுநர் நியமிப்பார்.
ஆனால், பெரும்பான்மை இல்லாத முன்னாள் முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது சட்டமாக இல்லை. அது வெறும் வழக்கம் தான்.
நாகரிகம் கருதி, இதுவரை பெரும்பான்மை பெற தவறும்போது, முதலமைச்சர் ஆளுநரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்குவார்கள்.
ஒருவேளை, முன்னாள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவோ… பதவியில் இருந்து இறங்கவோ மறுக்கும்போது, அவரை ஆளுநர் பதவி நீக்கம் செய்யலாம்.
ஆளுநருக்கு இந்த உரிமையை பிரிவு 164-ல் குறிப்பிடப்பட்டிருக்கும், ‘விருப்புரிமையின் படி’ என்கிற வார்த்தை தருகிறது என்கிறார்கள்.





