கேரள மாநிலம், கொச்சியில் செயல்படும் கருமணல் கம்பெனியான சி.எம்.ஆர்.எல் மற்றும் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் எக்சாலோஜிக் நிறுவனம் இடையேயான பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. வீணா நிர்வாக இயக்குனராக உள்ள எக்சாலோஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், எந்தவிதமான சேவைகளையும் வழங்காமல் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திடமிருந்து 2.78 கோடி ரூபாயைப் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தத் தொகை அனைத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்செயல் மூலம் ஈட்டப்பட்ட பணம் என்ற வரம்பிற்குள் வருவதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. ஏற்கனவே பினராயி விஜயனின் வீடுகள், உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருந்தது. அமலாக்கத்துறை மற்றும் மத்திய தீவிர மோசடி விசாரணை அலுவலகம் இதுவரை சேகரித்துள்ள ஆதாரங்கள், ஆவணங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர், விசாரணை என்ற கட்டத்துக்கு நகர்ந்துள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக கேரள முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான பினராயி விஜயனின் மகள் டி.வீணா, கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ஆஜரானார். கறுப்பு மாஸ்க் அணிந்து வந்திருந்த வீணா விஜயனுடன், அவரது கணவரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது ரியாஸ் வந்திருந்தார்.
இந்த வழக்கில் கடந்த 12-ம் தேதி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு வீணாவிற்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. தனது உடல்நலக்குறைவு காரணமாக அன்று ஆஜராக இயலாது என அவர் அமலாக்கத்துறையிடம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 17-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்குப் புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜரானார். வீணா விஜயன் விசாரணைக்கு ஆஜரானதை ஒட்டி கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறை வழக்கு விசாரணை தொடர்பாக சி.எம்.ஆர்.எல் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குநர் சரண் எஸ்.கர்த்தா மற்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.என்.சசிதரன் கர்த்தாவின் மனைவியும், எம்பவர் இந்தியா கேபிடல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநருமான ஜெயா எஸ்.கர்த்தா ஆகியோரிடம் அமலாக்கத்துறை நேற்று தீவிர விசாரணை நடத்தியிருந்தது. அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் வீணா விஜயனிடம் விசாரணை நடைபெற்றது. சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்குப்பின் இரவு 8 மணியளவில் வீணா விஜயன் வீடு திரும்பினார்.





