தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
அந்தவகையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஜூன். 16) வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ.13.18 கோடியாக இருப்பதாக வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி செலவினம். அதற்கு இணையாக வருவாய் பெருக்கம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் வெள்ளை அறிக்கை வெளியீட்டிற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சித்திக்கிடம், கடன் சுமை அதிகரிக்க நலத்திட்டங்கள் காரணமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஏற்கெனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவாகிறது. ஆனால் நலத்திட்டங்கள் நிறுத்தப்படாது. வருவாய் திரட்டும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு அறிவித்துள்ள திட்டங்களுக்கு நிதியை உருவாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. யாரையும் குறை சொல்ல இந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. தற்போதைய நிலைமையை தெரிவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அரசுக்கு ரூ.100 வருவாய் கிடைத்தால் ரூ.45 செலவாகிறது. ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் பற்றாக்குறையாக உள்ளது.
இந்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தக் கடனும், மாநிலங்களால் வாங்க முடியாது. அவர்கள் அனுமதித்த அளவுக்கு உள்ளேயே தமிழ்நாடு அரசின் கடன் அளவு இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்பின் முழு விவரங்கள் கீழே PDF-ஆக இணைக்கப்பட்டிருக்கிறது.





