அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் நேற்று (மே.25) இணைந்தனர்.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்து, த.வெ.கவில் இணைந்திருக்கிறார்.
இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகியது குறித்து பேசிய இசக்கி சுப்பையா, “என் தொகுதி மக்களின் நலனுக்காகத் தான் நான் என் பதவியை ராஜினாமா செய்தேன்.
கடந்த 5 வருடங்களாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். என்னால் எந்தவிதமான நலத்திட்டங்களையும் அங்கு கொண்டு வர முடியவில்லை.
குறிப்பாக முன்னாள் முதல்வர் தொகுதிக்கான கோரிக்கையை கேட்டார். ஆனால் கோரிக்கையை கொடுத்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
என் தொகுதி மக்களுக்கு நான் நல்லது செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சி ஆதரவோடு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிச்சயம் நல்லது செய்ய முடியும்.
அதன் அடிப்படையில் தான் த.வெ.க பொதுச்செயலாளரை சந்தித்தேன். என் மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்.

யாரிடமாவது பணம் வாங்கியிருக்கிறேன் என்று யாராவது சொன்னால் இப்போதே அரசியலை விட்டு விலகி விடுகிறேன். தற்போது இருக்கும் முதல்வர் மக்களுக்கு நல்லதை செய்வார் என்ற நம்பிக்கையோடு அவருடன் பயணிக்க நான் வந்திருக்கிறேன்.
ஆடு நனைகிறது என்று ஓநாய் வருத்தப்படுமா? குதிரைபேரம் என்றால் என்ன? இரவெல்லாம் சிந்தித்தேன். பதில் கிடைக்கவில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.





