சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என நினைத்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென முடிவை மாற்றிக் கொண்டாராம். முந்தைய தி.மு.க ஆட்சியின் தொடக்கத்தில் நிதியமைச்சராக பொறுப்பேற்ற பழனிவேல் தியாகராஜன் சீனியர்களுடனான ஈகோ மோதலிலும் ஆடியோ சர்ச்சையிலும் சிக்கினார். பிறகு நிதியமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத்துறை வழங்கப்பட்டது. அதிலிருந்து ஒதுங்கியே இருந்த பி.டி.ஆர், மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
‘இனி அரசியலே வேண்டாம்’ என முடிவெடுத்த அவர், தற்போது தனது முடிவை மாற்றியிருப்பதாக சொல்கிறார்கள் உடன்பிறப்புகள். கருணாநிதி நினைவு நாளில் மாலையை போட்டுவிட்டு மீண்டும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தொடங்கிவிட்டார் பி.டி.ஆர்.
சமீப நாள்களாக, தினமும் தனது வீட்டில் ஆதரவாளர்களைச் சந்தித்து வருகிறாராம். வயது மூப்பு காரணமாக மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக இருக்கும் கோ. தளபதி பொறுப்பிலிருந்து விலகப் போவதுதான் பி.டி.ஆருக்கு புதிய தெம்பைக் கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அடுத்து மா.செ பதவியைக் கேட்டு காய்நகர்த்துவார் என்கிறார்கள் உடன்பிறப்புகள்!
முதல் நிதிநிலை அறிக்கையை த.வெ.க அரசு தாக்கல் செய்துள்ள நிலையில், வெவ்வெறு துறைகளின் மானிய கோரிக்கை விவாதங்கள் நடந்துவருகின்றன. ஆக்கப்பூர்வமான விவாதங்களை காட்டிலும் சட்டமன்றத்தை அரசியல் பட்டிமன்றமாக ஆளும்தரப்பும் எதிர்க்கட்சியும் மாற்றிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. ‘எதிர்க்கட்சி எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது த.வெ.க-தான் என தி.மு.க தரப்பு குற்றம்சாட்டுகிறது.

சமீபத்தில் சபாநாயகரைச் சந்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். அப்போது ‘தொடர்ச்சியாக தேவையற்ற விவகாரங்களை பேசி, எங்கள் உறுப்பினர்களை உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்கள் சில அமைச்சர்கள். தனிப்பட்ட தாக்குதலும் நடத்துகிறார்கள். இப்படியே போனால் எங்களுக்கும் பேசத் தெரியும். உங்களால் அவையை நடத்த முடியாது…’ என கறாராகச் சொல்லிவிட்டாராம்.
எதிர்க்கட்சித் தலைவரைக் கூல் செய்த சபாநாயகர், ‘ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைக்க நான் அனுமதிப்பதில்லை. பொதுக்கூட்டம் போல பேச யாரையும் அனுமதிப்பதில்லை’ என்றிருக்கிறார். ஆனால், தி.மு.க உறுப்பினர்களை சீண்டி அரசின் மீதான கேள்விகளை திசைதிருப்பும் மூடில்தான் த.வெ.க இருப்பதாக சொல்கிறார்கள் ஆளும் தரப்பினர்.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ்தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெற்றது. முறையற்ற ஒருங்கிணைப்பாலும் அத்துமீறிய தொண்டர்களாலும் மாநாடு பாதியிலேயே கைவிடப்பட்டது. மாநாட்டுக்கு வந்த இளைஞர்கள் பெரும்கூட்டமாக மேடையேற முனைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கே மூச்சு திணறல் ஏற்பட்டது.

‘திருமாவுக்கு ஏன் பாதுகாப்பு வழங்கவில்லை?’ என கேள்விகள் எழுந்த நிலையில், ’30 மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். எங்குமே இப்படி நடந்தது இல்லை. செயற்கையாக கூட்டத்தை கூட்டி திருமாவை தாக்க சதி நடந்ததாக சந்தேகம் இருக்கிறது…’ என கள்ளக்குறிச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்து பகீர் கிளப்பியிருக்கிறார்கள் சிறுத்தைகள்.
திருமாவுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. ‘ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு வி.சி.க தலைவர் திருமாவுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என நீண்டநாள் கோரிக்கை நிறைவேறாமலேயே இருக்கிறது என பொருமுகிறார்கள் சிறுத்தைகள்.
‘பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்படும்’ என சட்டமன்றத்தில் விளக்கியிருக்கிறார் அமைச்சர் கீர்த்தனா. அதேநேரம், ‘திட்டத்துக்குத் தேவைப்படும் 5,000 ஏக்கரில் 48% இடங்களே கையகப்படுத்தப்பட்டுள்ளன…’ என அமைச்சர் நிர்மல்குமார் சொல்கிறார். ‘விமான நிலைய திட்டம் கைவிடப்படுமேயானால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?’ என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பா.ம.க எம்.எல்.ஏ கணேஷ்குமாரும் கேட்க, ‘மாற்றுத்தொழில் திட்டங்கள் மக்களை பாதிக்காதவாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், இந்தப் பகுதியில் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஏற்படும்” என்கிறார் அமைச்சர் கீர்த்தனா.

‘விவசாய நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது.. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது’ என்ற நோக்கத்தில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை அரசு கைவிட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கும் நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தொழில் திட்டங்கள் தொடங்கினால் மட்டும் விவசாயம் பாதிக்கப்படாதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ‘விமான நிலையத் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட திட்டங்களை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது’ என நெருக்குகிறார்கள் கம்யூனிஸ்ட்கள். நான்கு முனைகளிலிருந்து வரும் தாகுதல்களை சமாளிக்க முடியாமல் குழம்பித் தவிக்கிறது த.வெ.க முகாம்.
கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி, தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை சுமூகமாக நடத்தி முடிக்க, முதல்வர் விஜய்யை மத்திய மாண்புமிகு ஒருவர் ரகசியமாக சந்தித்ததாக சொல்கிறார்கள் முதல்வர் அலுவலகப் புள்ளிகள்.

‘அமித் ஷா ஜி-க்கு உங்களை பழிவாங்கும் நோக்கமெல்லாம் கிடையாது. கூட்டணியிலிருந்து காங்கிரஸை நீங்கள் கழற்றிவிட்டாலே போதும்’ எனப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் அந்த மத்திய மாண்புமிகு. ‘நிதி விவகாரங்களில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என முதல்வரும் பதிலுக்கு கேட்க, அதற்கும் க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். அதன்பிறகு, தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் முதல்வர் விஜய். பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
‘முந்தைய அரசு போல ஒன்றிய அரசை சீண்டுவது எங்கள் நோக்கமல்ல.. ஒற்றுமையாக செயல்படுவோம்’ என முதல்வர் விருப்பம் தெரிவிக்க, ‘முதல்வர் விஜய்யின் அணுகுமுறை நன்றாக இருக்கிறதே!’ என மத்திய மாண்புமிகுக்களிடம் பகிர்ந்திருக்கிறார் அமித் ஷா. எனவே இருதரப்புக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.!





