தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக கூட்டணி மறுசீரமைப்பு வேகமெடுத்து வரும் நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் முடிவை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான இறுதி முடிவு ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிகாரபூர்வமாக அறிவிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் காலகட்டத்தில் தொடங்கிய திமுக-மதிமுக நெருக்கம், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து நீடித்து வந்தது. சுமார் ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்த மதிமுக, தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறும் முக்கியமான அரசியல் முடிவை நோக்கி நகர்வதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பின் மாறிய அரசியல் களம்
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலின் கூட்டணி கணிதத்தையே மாற்றியமைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்ததற்குப் பிறகு, அதிமுக-வின் முன்னாள் மற்றும் தற்போதைய நிர்வாகிகள் பலர் அக்கட்சியில் இருந்து விலகி தவெக-வில் இணைந்து வருகின்றனர்.
அதேநேரத்தில், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தவெக அரசிலும் பங்கேற்று இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகின்றன. இந்தச் சூழலில், அடுத்ததாக மதிமுக-வும் அதே அரசியல் திசையை நோக்கி நகரும் அறிகுறிகள் தென்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
உதயசூரியன் சின்னம் விவகாரம் உருவாக்கிய அதிருப்தி
திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்த போதிலும், 2024 மக்களவைத் தேர்தலில் துரை வைகோ போட்டியிட்ட திருச்சி தொகுதியைத் தவிர, பிற தேர்தல்களில் பெரும்பாலும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக நிர்பந்திக்கப்பட்டதாகக் கட்சிக்குள் நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
தனித்துவ அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டதாகவும், கூட்டணியில் மதிமுக-வுக்கு உரிய அரசியல் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் பல்வேறு மட்டங்களில் நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த அதிருப்தியே தற்போது கூட்டணி மறுபரிசீலனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் நெருக்கம்… துரை வைகோவின் அரசியல் நகர்வுகள்
முதல்வராகப் பதவியேற்ற பிறகு விஜய், வைகோவின் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்தது, அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது. அந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார் வைகோ.

இதனையடுத்து, முதல்வர் விஜய் திருச்சிக்குச் சென்றபோது விமான நிலையத்திலேயே நேரில் சென்று அவரை வரவேற்றார் துரை வைகோ. மேலும், மாவட்ட பொறுப்பு அமைச்சருடன் நடைபெற்ற பல்வேறு ஆய்வுக் கூட்டங்களிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தது, மதிமுக தவெக அரசுடன் இணக்கமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் கருதப்படுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்கள் நிலை என்ன?
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகும் பட்சத்தில், அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை முக்கியமான கேள்வியாக எழுந்துள்ளது.
கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி உறுப்பினர் செந்தில்நாதன் ஆகியோர் இருவரும் திமுக-வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்.

தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, திமுக உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் எதிராக வாக்களிக்காமல் அவை நடவடிக்கையை புறக்கணித்ததே அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மதிமுக அதிகாரபூர்வமாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்தால், இந்த இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

திமுக கூட்டணியில் தொடரும் வெளியேற்றம்?
2026 தேர்தலில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளை இணைத்து தேர்தலைச் சந்தித்த திமுக கூட்டணியில் இருந்து ஏற்கெனவே பல முக்கிய கூட்டணிக் கட்சிகள் விலகியுள்ளன. சில கட்சிகள் வெளிப்படையாகவும், சில கட்சிகள் மறைமுகமாகவும் தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன.
ஒன்பது ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்து வந்த மதிமுக-வும் அந்த பட்டியலில் இணைய உள்ளதா என்பது ஜூன் 27-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிமுக தவெக-வை நோக்கி நகரும் எனக் கூறப்படும் நிலையில், தவெக-வின் மூத்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்திருப்பது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.





