அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் கத்தார் நாட்டுடன் இணைந்து பாகிஸ்தானும் செயல்பட்டு வருகிறது.
இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், “பாகிஸ்தானின் தீவிரமான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த அமைதி ஒப்பந்தத்தைக் கெடுக்க நினைப்பவர்களால் பரப்பப்படும் தொடர்ச்சியான வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் குறித்து நாங்கள் முழுமையாக அறிவோம்.
அந்த தேவையற்றதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்கா – ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் எட்டப்பட்டுவிட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்.
அடுத்தகட்ட நகர்வுகளை இறுதி செய்யப் பாகிஸ்தான் இப்போது இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு மிக அருகில் இருந்ததில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “ஈரான் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களுக்கும், எழுத்துப்பூர்வமாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, “அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டது.
அது இறுதி செய்யப்படும் வரை ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுப்பான முறையில் அனைத்து விவரங்களும் விரைவில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.





