மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இத்தோல்வியால் கட்சி கலகலத்துப்போய் இருக்கிறது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களில் பெரும்பான்மையினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். அவர்கள் மம்தா பானர்ஜி கூட்டிய எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், சொந்தமாக ஹோட்டலில் கூட்டம் நடத்தி சொந்தமாக எதிர்க்கட்சி தலைவரை நியமிப்பது குறித்து ஆலோசித்துள்ளனர்.
தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சி தலைவரை நியமிக்க மம்தா பானர்ஜி தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி, அதில் சோபன்தீப் என்பவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க முடிவு செய்தார். இது தொடர்பாக முறைப்படி திரிணாமுல் காங்கிரஸ் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியது.
அக்கடிதத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அபிஷேக் பானர்ஜி கையெழுத்து போட்டு இருந்தார். ஆனால் கூட்டம் நடந்த விவரத்தையும், எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்தையும் பெற்று அனுப்பும்படி சபாநாயகர் கடிதத்தை திருப்பி அனுப்பினார்.
மே 13, 14ம் தேதிகளில் எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்ற பிறகு அங்குள்ள பதிவேட்டில் அவர்கள் கையெழுத்திட்டனர். மே 19ம் தேதி எம்.எல்.ஏ-க்களிடம் கையெழுத்து வாங்குவதற்காக மம்தா பானர்ஜி தனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தார். ஆனால் அதிகமான எம்.எல்.ஏ-க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். அப்படி இருந்தும் 70 எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை கட்சித் தலைமை சபாநாயகருக்கு அனுப்பி வைத்தது.
அக்கடிதத்தில் சிலரது கையெழுத்து பெரிய எழுத்தில் இருந்தது. சிலரது கையெழுத்தில் இனிசியல் மட்டும் இருந்தது. இதனால் கையெழுத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சட்டமன்றத்தில் பதவியேற்க வந்தபோது போட்ட கையெழுத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட கையெழுத்தை ஒப்பிட்டுப்பார்த்தனர். இதில் 20 கையெழுத்துகள் ஒத்துப்போகவில்லை. இதையடுத்து கையெழுத்தில் மோசடி என்று கூறி சட்டமன்ற சபாநாயகர் போலீஸில் புகார் செய்தார்.
மே 27ம் தேதி தங்களது கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ரிதப்ரதா மற்றும் சந்திபன் ஆகியோர் முறைப்படி புகார் அளித்தனர். இது மம்தா பானர்ஜிக்கு மேலும் சிக்கலை பெரிதாக்கியது. இது தொடர்பான வழக்கை சி.ஐ.டி போலீஸார் விசாரிக்க ஆரம்பித்தனர். அதோடு இதில் அபிஷேக் பானர்ஜிக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
இது குறித்து முதல்வர் சுவேந்து அதிகாரி அளித்த பேட்டியில், “சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்களையே திரிணாமுல் காங்கிரஸ் ஏமாற்றி இருக்கிறது. கையெழுத்துகளை பெரிய எழுத்துக்களில் (block letters) போட்டிருந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களில் 13 பேரிடம் பேச, சிஐடி அதிகாரிகள் சென்றனர். அந்த சட்டமன்ற உறுப்பினர்களில் மூவர், தாங்கள் அந்தத் தீர்மானத்தில் கையெழுத்திடவில்லை என்பதை கேமராவின் முன்பே ஒப்புக்கொண்டனர்” என்று கூறினார்.

இப்பிரச்னையைத் தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ரிதப்ரதா மற்றும் சந்திபன் ஆகியோரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கியது. இதற்கான காரணத்தை அக்கட்சி வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், கட்சிக்குள் அபிஷேக்கிற்கு எதிரான ஓர் அணியை உருவாக்கும் சதியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு பேரை நீக்கிவிட்டால் மற்ற எம்.எல்.ஏ-க்கள் அணி மாறுவதை தடுத்துவிடலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் கருதியது. ஆனால் ரிதப்ரதா அதிரடியாகச் செயல்பட்டு அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை திரட்டி ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அவர்களை ஒன்று திரட்டிவிட்டார். இதனால் மம்தா பானர்ஜி தனது வீட்டில் கூட்டிய கூட்டத்திற்கு மொத்தமுள்ள 80 பேரில் 60 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவில்லை. இப்போது சிவசேனாவில் ஏற்பட்டது போன்ற ஒரு பிளவை திரிணாமுல் காங்கிரஸ் எதிர்நோக்கி இருக்கிறது.





