உலக பட்டினி தினத்தையொட்டி, வேலூர் சட்டமன்றத் தொகுதி த.வெ.க சார்பாக இன்றைய தினம் சி.எஸ்.ஐ மத்திய தேவாலய வளாகத்தில் அசைவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொகுதியைச் சார்ந்த தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள் ஆகியோருக்கு மரியாதை நிமித்தமாக அழைப்புவிடுத்திருந்தார் எம்.எல்.ஏ எம்.எம்.வினோத் கண்ணன். அவரின் அழைப்பை ஏற்று, அவர்களும் தங்களின் குடும்பத்துடன் விருந்தில் கலந்துகொண்டனர்.
த.வெ.க வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். சுமார் 3,000 பேர் சாப்பிடும் வகையில், சிக்கன் பிரியாணி தயார்ச் செய்யப்பட்டிருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு இனிப்பு வழங்கி, அவர்கள் பகுதி குறைகளையும், அடிப்படைத் தேவைகளையும் கேட்டறிந்தார் வினோத் கண்ணன். விருந்துக்குப் பிறகு இலை எடுப்பது முதற்கொண்டு, வளாகத்தை சுத்தப்படுத்துவது வரை த.வெ.க-வினரே செய்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இது பற்றி, எம்.எல்.ஏ வினோத் கண்ணன் கூறுகையில், “வறுமையைப் போக்கி, `பட்டினி இல்லாத உலகம்’ என்பதை உறுதி செய்வதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும். இந்த நாளில், பொதுவாக உணவளிப்பது என்பதைவிட விருந்து வைப்பது தான் சிறந்ததாக இருக்கும். நாம் வாழும் இந்தப் பகுதியின் சுகாதாரம், தூய்மை மற்றும் பொது சுகாதாரத்தைப் பேணிக் காப்பதில் தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது.
எனவே தான், இந்த விருந்து நல்லதொரு தொடக்கமாக அமைந்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்களும் அவர்களின் குறைகளை என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொன்றையும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முழு முயற்சிகளில் ஈடுபடுவேன்’’ என்றார் உறுதியாக.





