தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீர்த்தனாவிற்கு அமைச்சர் பொறுப்பு வழங்கபட்டிருக்கிறது.
சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பிறகு தன்னுடைய தொகுதிக்குச் செல்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார் அதில் கூறியதாவது, “சிவகாசியின் முதல் பெண் எம்எல்ஏ என்று சொல்கிறார்கள் அதைவிட சிறந்த எம்.எல்.ஏ-வாக பட்டம் வாங்கி அண்ணாவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
இதுவரை சிவகாசியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது. கடைசி ஐந்து வருடமாக அது செயல்படவே இல்லை. நாங்கள்தான் அதைத் திறந்தோம் 24 மணி நேரம் மக்களுக்காக அது செயல்படும்.
யார் யாரோ என்னென்னமோ சொல்கிறார்கள். கையில் தான் இருந்தது அவர்கள் பொறுத்திருந்தால் சான்றிதழ் கைக்கு வந்திருக்கும். மறதி என்று சொல்கிறார்கள். அதைத் தவிர்த்து இருக்கலாம்.
சிவகாசியில் அடிக்கடி வெடிவிபத்து ஏற்படுவது குறித்த ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என வாக்குறுதியிலே சொல்லியிருந்தேன். அதற்கான வேலைகள் நடைபெறும்.
இன்று வரை இதுபோல் யாரும் குழு அமைக்கவில்லை. கடந்த வெடி விபத்தில் கூட பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தோம். வெடி விபத்து குறித்து ஆராய்ந்தோம், பாதிக்கபட்டவர்களுக்கான நீதி குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசிப்போம்.
மது விலக்கு குறித்து முதல் கையெழுத்திட்டவர் தலைவர் விஜய் அண்ணா, முக்கியமான பாதைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன இனிமேல் எந்த மாதிரி நடவடிக்கை இருக்கும் என உங்களுக்கே தெரியும் இதற்கான பதில் நான் சொல்ல வேண்டிய தேவையில்லை” என்றார்





