கேரள மாநில முதல்வராக 2016-ம் ஆண்டு முதல் பினராயி விஜயன் இருந்து வருகிறார். 2016 தேர்தலில் சி.பி.எம் கூட்டணி பெரும்பான்மையுடன் கேரளத்தில் ஆட்சியை பிடித்தது. முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்றார். அதுபோன்று 2021 சட்டசபை தேர்தலில் கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 99 தொகுதிகளில் வென்று பினராயி விஜயன் 2.0 ஆட்சி அமைத்தார்.
இந்த நிலையில் கேரளத்தில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. சி.பி.எம் மீண்டும் ஆட்சியை பிடித்து பினராயி விஜயன் 3.0 ஆட்சி அமைப்போம் என அக்கட்சி நிர்வாகிகள் கூறி வந்தனர். அதே சமயம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என கடந்த 29-ம் தேதி வெளியான எக்ஸிட் போல் கணிப்புகள் தெரிவித்துள்ளன.
எக்ஸிட் போல் கணிப்புகள் பொய்த்துபோகும் என சி.பி.எம் தலைவர்கள் கூறி வருகின்றனர். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட உள்ள நிலையில் தனது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பயோவில் ‘கேரள முதலமைச்சர்’ என்பதை நீக்கிவிட்டு ‘பொலிட் பீரோ உறுப்பினர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்சிஸ்ட்)’ என மாற்றியுள்ளார் பினராயி விஜயன்.
நேற்று (மே 3) இந்த மாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தோல்வி ஏற்பட்டுவிடும் என்ற பயத்தால் முதல்வர் தனது பயோவில் திருத்தம் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ள சி.பி.எம் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, “தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மார்ச் 16-ம் தேதியே முதல்வர் பினராயி விஜயன் தனது பயோவில் பொலிட்பீரோ உறுப்பினர் என மாற்றம் செய்துவிட்டார். தேர்தல் நடைமுறை விதிகள் அமலானதும் இந்த மாற்றத்தை செய்துவிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பயந்து இப்போது முதலமைச்சர் என்ற பயோவை திருத்தி கட்சி பதவியை மட்டும் குறிப்பிட்டுள்ளதாக கூறுவது தவறான தகவல்” என்றார்.





