டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ (CBI) பதிவு செய்த ஊழல் வழக்கில் இருந்து, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 23 பேரையும் டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்திருந்தது.
ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ மனுதாக்கல் செய்தது. இதனை நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மா விசாரித்து வருகிறார்.
இதனிடையே டெல்லி மதுபான கொள்கை வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒரு சார்புடையவராக உள்ளதாகக் கூறி, அவரை வழக்கில் இருந்து விலக்கக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், தற்போது கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ” நீதிபதி ஸ்வர்ண காந்த சர்மாவிடம் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை சுக்கு நூறாகிவிட்டது.

அவர் முன்பு நான் இனி நேரடியாக ஆஜராகவோ, வழக்கறிஞர் வைத்தோ வாதிட மாட்டேன். மகாத்மா காந்தியின் சத்தியாகிரக வழியைப் பின்பற்ற நான் முடிவு செய்துள்ளேன். எனது மனசாட்சியின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று பேசியிருக்கிறார்.





