ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் என 4 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க கூட்டணியில் தி.மு.க 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 3 தொகுதிகளிலும் பா.ஜ.க ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் சிலர் தங்கள் சொந்த தொகுதியை விட்டுவிட்டு மாற்று தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
திருவாடானை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பரமக்குடியில் வசிக்கிறார். இதனால் இவர் தனது வாக்கை தனக்கு செலுத்த முடியாது.
இவரை எதிர்த்து போட்டியிடும் காங். வேட்பாளர் கருமாணிக்கத்திற்கு காரைக்குடி தொகுதிக்குட்பட்ட கப்பலூரில் வாக்கு உள்ளது. இதனால் இவரும் தனது வாக்கை தனக்கு செலுத்த முடியாது.

ராமநாதபுரத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்தின் வாக்கு மேல ராமநதி கிராமத்தில் உள்ளது. இந்தக் கிராமம் முதுகுளத்தூர் தொகுதியில் உள்ளதால் முத்துராமலிங்கமும் தனது வாக்கினைத் தனக்கு செலுத்த முடியாது.
முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் வாக்கு உள்ளது. இதனால் ராஜகண்ணப்பனும் தனது வாக்கினைத் தனக்கு போட முடியாது.

தேர்தல் பிரசாரம் துவங்கிய நாள் முதல் கொழுத்தும் வெயிலில் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் உள்ள குக்கிராமங்கள் தொடங்கி நகர்புறங்கள் வரையில் உள்ள சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து சென்று தங்களுக்கு வாக்கு கேட்டனர் இந்த வேட்பாளர்கள்.
இவர்களுக்கு ஆதரவாக அவர்கள் சார்ந்திருக்கும் கட்சித் தலைவர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கூட இந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இவை எல்லாம் வெற்றியைத் தராது எனக் கருதி பண்ட பாத்திர அன்பளிப்புகள் தொடங்கி பண பட்டுவாடா வரை செய்து வாக்கு திரட்டினர்.
தங்களுக்கு வாக்காளர்கள் வாக்கு போட வேண்டும் என்பதற்காக தேர்தல் களத்தில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த இந்த வேட்பாளர்களும், அவரது குடும்பத்தினரும் கூட அவர்களுக்குத் தேவையான வாக்கினைச் செலுத்திக்கொள்ள முடியாத நிலை தொகுதி மாறி போட்டியிட்ட காரணத்தினால் உருவாகி போனதை என்னவென்று சொல்வது.





