நாட்டில் மனித – வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் அதிகம் நிகழும் மாவட்டங்களில் ஒன்றான நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களில் 12 பேர் யானை, புலி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகளின் எதிர்கொள்ளல்களால் உயிரிழந்துள்ளனர். கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் ஆட்கொல்லி புலியால் இரண்டு நபர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல் பாகங்களையும் தின்றுச் சென்றுள்ளது. மனிதர்களை கொன்றுத் தின்று பழகிய அந்த புலி, அடுத்து யாரை வேண்டுமானாலும் இரையாக்கலாம் என்கிற அச்சத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த புலியை உடனடியாக அடையாளம் கண்டு பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முழு கடையடைப்பு மற்றும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் முழு கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஒரு சில அரசு அதிகாரிகளின் வாகனங்களில் சிலர் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபடுவதால், வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக காவல்துறையினரை வரவழைத்து பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். வனத்துறையை எதிர்த்து கூடலூர் மக்கள் தன்னெழுச்சியாக 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தப் போராட்டதிற்கு அழைப்பு விடுத்து இரண்டாவது நாளாக கட்சி பேதமின்றி போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், காவல்துறையினர் பதற்றம் அடைந்துள்ளனர்.





