இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா’ மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்’ பெயரில், இந்தியா முழுவதும் போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
தொடர்ந்து போலி மருந்து தொழிற்சாலைகள், அவற்றின் குடோன்களுக்கு சீல் வைத்ததோடு, முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன், ராஜா, ராணா, மெய்யப்பன், விவேக் உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார்.
அத்துடன் முக்கிய குற்றவாளியான ராஜா நடத்தி வந்த போலி மருந்து தொழிற்சாலைகள், குடோன்களில் சோதனை செய்து, பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கிய இந்த வழக்கை விசாரிக்க எஸ்.பி நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (S.I.T) அமைக்கப்பட்டது.
அந்தக் குழு ராஜாவின் மனைவி ஞானப்பிரியா, அவர்களின் பங்குதாரரான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிகண்டன், விருப்ப ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உள்ளிட்ட 13 பேரை கைது செய்தது.
அதன்படி இந்த வழக்கில் 4 பெண்கள் உட்பட 26 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் வலியுறுத்தினர்.
அதனால் ஆளுநர் கைலாஷ்நாதனின் பரிந்துரையை ஏற்று வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றியது மத்திய உள்துறை அமைச்சகம். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதுச்சேரிக்கு வந்து தங்களுடைய முதல்கட்ட விசாரணையை தொடங்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதன்பிறகு அமைதியானார்கள்.
மேலும், சட்டமன்றத் தேர்தல் காரணமாக தற்காலிகமாக விசாரணையை தள்ளி வைத்திருப்பதாகவும் சி.பி.ஐ தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில் முக்கிய குற்றவாளியான ராஜா உள்ளிட்ட 26 பேரும் ஜாமினில் வெளியே வந்தனர்.
இந்த நிலையில்தான் நேற்று புதுச்சேரிக்கு வந்த சி.பி.ஐ அதிகாரிகள், முக்கிய குற்றவாளியான ராஜாவை மீண்டும் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதுகுறித்து சி.பி.ஐ அதிகாரிகள் சிலரிடம் பேசியபோது, “சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ராஜா, தன் மீதான சி.பி.ஐ நடவடிக்கையில் இருந்து எப்படியாவது `எஸ்கேப்’ ஆகிவிட வேண்டும் என்று திட்டமிட்டார்.
அதன்படி டெல்லியில் தனக்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகளை சந்தித்து `டீல்’ பேசினார். அதேசமயம் ராஜா டெல்லிக்கு வந்திருக்கிறார் என்ற தகவல் வந்ததும், அவரையும் அவர் சந்திக்கும் நபர்களையும் நாங்கள் கண்காணிக்க ஆரம்பித்தோம்.

அப்போதுதான் ராஜாவிடம் சில காவல்துறை அதிகாரிகள் ரூ.5 கோடி பேரம் பேசியிருக்கிறார்கள். அதன்பிறகு அந்த பேரம் இரண்டு கோடிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஜூன் 6-ம் தேதி சென்னையைச் சேர்ந்த நாகூரான் என்பவரிடம் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்த ராஜா, அதை ஹவாலா முறையில் டெல்லியில் கொடுக்குமாறு கூறினார்.
அதன்பிறகு தன்னுடைய நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் என்பவரிடம் மேலும் ஒரு கோடி ரூபாயைக் கொடுத்து டெல்லிக்கு அனுப்பினார் ராஜா. டெல்லி வந்த ராஜ்குமார் ஹவாலா முறையில் மாற்றப்பட்ட ஒரு கோடி ரூபாயை பெற்றுக் கொண்டார்.
அதன்பிறகு மொத்தம் இரண்டு கோடி ரூபாயை, டெல்லி காவல் துறையில் இருக்கும் இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார் என்பவரிடம் கொடுத்தார். அப்போதுதான் நாங்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தோம். அதன்பிறகுதான் புதுச்சேரி வந்து ராஜாவை கைது செய்தோம்” என்றனர் விரிவாக.





