தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார்.
முதலமைச்சரின் முதல் முதல்நாள் கையெழுத்திட்ட இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த காவல்துறை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அணில் குமார் கிரி இந்தச் சிறப்பு அதிரடிப்படையைத் தொடங்கி வைத்துள்ளார்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் பணிகள் குறித்து தெரிவித்த சேலம் மாநகர காவல்துறையினர், ” சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நேரடியாக முதலமைச்சர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும்.
1 காவல் உதவி ஆணையாளர், 1 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என 6 பேர் இருப்பார்கள். நான்கு சக்கர வாகனம், தொடர்பு சாதனங்கள், காவல்துறையினரின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் ‘பாடி ஓன்’ கேமிராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
குற்றச் சம்பவங்கள் நடைபெறும் அல்லது நடைபெற வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து கண்காணிப்பது, பொது இடங்களில் தொடர்ந்து சுற்றுக்காவல் மேற்கொண்டு பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாக்குதல், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் என மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுதல்,

பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்த மனுக்களுக்கு உடனடி மேற்கொள்வது, பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் உறுதி செய்வது, சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என மொத்ததில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் உத்திகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்படும்” என்றனர்.





