சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளைச் சுட்டிக்காட்டி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளை வங்கிகள் முடக்கி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 830 பேருடன் சில பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நடவடிக்கை தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் எரிபொருள் விநியோகமும் பெட்ரோல் பங்குகளின் அன்றாடச் செயல்பாடுகளும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளதாகத் தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் (TNPDA) எச்சரித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து பேசிய TNPDA தலைவர் கே.பி. முரளி, “ஒரு வணிகத்தின் முதன்மை வங்கிக் கணக்கை முழுமையாக முடக்குவதால், எண்ணெய் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய பணம், ஊழியர்களின் சம்பளம் மற்றும் அன்றாடச் செலவுகளைச் செய்ய முடியாமல் டீலர்கள் தவிக்கின்றனர்.
இதனால் வழக்கமான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதன் நேரடிப் பாதிப்பை வாகன ஓட்டிகளே சந்திக்க நேரிடும். பெட்ரோல் பங்குகளில் தினமும் 200 முதல் 500 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
மொத்த வருவாயில் பாதியளவு கிரெடிட் கார்டு, யுபிஐ (UPI) போன்ற ஆன்லைன் முறைகளிலேயே வருகிறது. பெட்ரோல் போட வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பின்னணியையோ அல்லது அவர் தரும் பணத்தின் ஆதாரத்தையோ சரிபார்க்க உரிமையாளர்களுக்கு எந்த வழியும் இல்லை.
ஆனால், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை சைபர் குற்ற வழக்கில் சந்தேகத்திற்குரியதாக மாறும்போது, வங்கிகள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பெட்ரோல் பங்க்கின் முழு வங்கிக் கணக்கையும் முடக்கி விடுகின்றனர். அதோடு, வழக்கு பற்றிய முழு விவரமும் தெரியாமல் உரிமையாளர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், அடைத்து வைப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றார்.

தொடர்ந்து சைபர் குற்ற விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகக் கூறியுள்ள உரிமையாளர்கள், ”டிஜிட்டல் முறையில் பணம் பெற்றதற்காகத் தங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துவதை ஏற்க முடியாது. ஒருவேளை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் பங்க்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளைப் பெறுவதைத் தற்காலிகமாக நிறுத்துவோம்” என TNPDA சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், முழு வங்கிக் கணக்கையும் முடக்குவதற்குப் பதிலாகச் சந்தேகத்திற்குரிய குறிப்பிட்டத் தொகையை மட்டும் கட்டுப்படுத்த வேண்டும். நேரடி ஆதாரங்கள் இன்றி கைது நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பெட்ரோல் பங்க்குகளில் இதுபோன்ற ஆன்லைன் சிக்கல்களைக் கையாள முறையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) அரசு உருவாக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக முதல்வர் விஜய்க்குப் புகார் மனு ஒன்றை ஆன்லைனில் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.





