தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல்.23) நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க என பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.
கடந்த 30 நாட்களுக்கு மேலாக தேர்தல் பிரசாரங்கள் அனல் பறந்த நிலையில் மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.81 லட்சம் தபால் வாக்குகள் பதிவாகியுள்ளது.
முதல்முறை வாக்காளர்கள் 14.59 லட்சம் பேர் உள்ளனர். தேர்தலுக்காக 1,06,418 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

325 வாக்குச்சாவடிகளை பெண்களே நிர்வகிக்கவுள்ளனர்; 75 வாக்குச்சாவடிகளை இளைஞர்கள் நிர்வகிக்கவுள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் 62 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழ்நாட்டில் 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை ரூ.1,262 கோடி மதிப்பிலான பரிசுப்பொருட்கள் மற்றும் 543 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.





