தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் தேர்தலில் இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க, நா.த.க எனப் பலமான நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மொத்தம் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுள்ள நிலையில், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்குப்பதிவை அமைதியாக நடத்த 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 4.74 லட்சம் தேர்தல் பணியாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான் உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதும் தீவிரமாக வாக்குச் சேகரித்தனர்.
இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. பிரசாரம் ஓய்ந்த பிறகு, வாக்குப்பதிவு முடியும் வரையிலான 48 மணி நேரம் ‘அமைதி நேரமாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ஊடகங்கள் வழியாகவோ அல்லது நேரடியாகவோ பிரசாரம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 21 முதல் 23 வரை டாஸ்மாக் கடைகளை மூடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 23-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.





