மத்தியப் பிரதேசத்தில் ‘ஸ்வர்ண் மங்கலம்’ (Swarn Mangalam) என்ற மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தீபக் சோனி. இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரைசெனில் நடைபெற்ற ஒரு விவசாயக் கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக் சோனியை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாகத் தெரிகிறது. இதனால், சரியான நேரத்துக்கு அவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முடியவில்லை.
இது தொடர்பாக தீபக் சோனியின் குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “விபத்து நடந்த உடனேயே சோனி தீபக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. அவரை போபாலுக்குக் கொண்டு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. சுமார் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரப்படவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்த நிலையில், அவரை போபாலுக்குக் கொண்டு செல்ல ஒரு தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்வதைத் தவிர வேறு வழியில்லை.
தாமதமாகவே அவரை போபால் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றோம். ஆனால், அவர் சிகிச்சையின்போது உயிரிழந்தார். பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முதலமைச்சர் மோகன் யாதவ் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட ஒரு விவசாய நிகழ்ச்சி தொடர்பான “விஐபி பணிகளுக்காகவே” மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்த ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.” எனக் குற்றம்சாட்டினர்.
அனைத்து ஆம்புலன்ஸ்களும் விஐபி ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும், உடனடியாக மாற்று ஏற்பாடு எதையும் செய்ய இயலவில்லை என்றும் மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் யஷ்பால் பாலியன் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் கருத்து தெரிவித்த, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வித் துறை இணை அமைச்சர் நரேந்திர படேல், “உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் எனது இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன். மேலும், இச்சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். மருத்துவமனை நிர்வாகம் சார்ந்தவர்களோ, ஆம்புலன்ஸ் சேவை சார்ந்தவர்களோ – யார் தரப்பில் அலட்சியம் இருந்தது என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.





