முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவிரமாக வேலை பார்த்து வருவதால் தூத்துக்குடி அரசியல் பரபரக்க தொடங்கியிருக்கிறது.
விஜய்யின் தவெகவில் தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளராக ஆக்டிவாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தவர் அஜிதா. கட்சியின் உள்ளடி அரசியலால் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவி அவருக்குக் கிடைக்கவில்லை.
SDR சாமுவேல் என்பவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகத்தை முற்றுகையிட்டு விஜய்யின் காரையும் மறித்து போராடியிருந்தார்.
ஆனால், தவெக தலைமை அஜிதாவைக் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த மூன்று மாதங்களாக எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்தார் அஜிதா. இந்நிலையில், அவரைத் தங்கள் கட்சியில் இணைக்க திமுகவும் அதிமுகவும் தீவிரமாக முயன்றதாகக் கூறப்படுகிறது.
திமுக தரப்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுக தரப்பில் செல்லபாண்டியன், சண்முகநாதனும் அஜிதாவை அணுகி தங்கள் முகாமுக்கு இழுக்கப் பேசியிருக்கின்றனர்.

இடையில் சசிகலா அணியும் நாம் தமிழரும் கூட அஜிதாவிடம் பேசிப் பார்த்திருக்கிறார்கள். ‘உழைத்த உழைப்புக்கு அங்கீகாரம் இல்லை. இனியும் தவெகவில் தொடர வேண்டாம்’ என ஆதரவாளர்கள் அழுத்தவே அஜிதாவும் தூத்துக்குடி லோக்கல் பாலிட்டிக்ஸை மனதில் வைத்து அதிமுக பக்கமாகச் செல்லும் மனநிலைக்கு வந்ததாகக் கூறுகின்றனர்.
இந்நிலையில்தான், முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்லும் நிலையில் அவர் முன்னிலையில் அஜிதாவை கட்சியில் இணைக்க ஒரு டீம் தீவிரமாக முயன்று வருவதாகக் கூறுகின்றனர்.
‘முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைவது எவ்வளவு பெரிய கௌரவம் தெரியுமா?’ எனப் பல லைன்கள் வழியாக அழுத்தம் கொடுப்பதில் அஜிதாவே குழம்பிப் போயிருக்கிறாராம். முதல்வர் 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லும் நிலையில் 3 மணி வரை முடிவெடுக்க நேரம் கேட்டிருப்பதாக அஜிதா தரப்பு கூறுகிறது.
‘முதல்வர் முன்னிலையில் இணைக்கும் அளவுக்கு அவர் அவ்வளவு வொர்த்தான ஆளா?’ எனும் கேள்வியோடு திமுகவின் இன்னொரு டீம் அஜிதாவின் இணைப்புக்கு முட்டுக்கட்டை போடவும் பார்க்கிறதாம்.
அஜிதாவை இணைப்பதன் மூலம் திருச்செந்தூரில் மீனவர்களின் வாக்குகளை வெகுவாகக் கவர முடியும் எனத் திட்டமிட்டிருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வரின் வருகையையொட்டி அதற்கான காய் நகர்த்தலைப் பரபரப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்.





