தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
விஜய் பேசியவை, ‘திமுக கையில் இந்நேரம் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. எதாவது முட்டுக்கட்டை போட்டு என்னை வரவிடாமல் செய்திருப்பார்கள். திமுக அரசு எவ்வளவோ அவதூறுகளை நம் மீது பரப்பினார்கள்.
இந்த திமுக கூட்டணியும் பாஜக கூட்டணியும் வெளியே தனியாக தெரிந்தாலும், உள்ளே அவர்கள் ஒன்றுதான். இருவருக்குமே ஒரே நோக்கம்தான். உங்களுக்காக நான் களத்துக்கு வரக் கூடாது என்றே இருவரும் நினைக்கின்றனர். நாம் வந்த பிறகு அவர்களால் ஊழல் செய்ய முடியவில்லை. அதனால்தான் என் மீது கோபம். ஸ்டாலின் சார் ஒரு கல்லாப்பெட்டி கூட்டணி அமைத்திருக்கிறார். கூட்டணிக் கட்சி தலைவர்களே தங்கள் கூட்டணிக்கு ஓட்டுப் போட மாட்டார்கள் போல. அந்த அளவில் இருக்கிறது அந்த கூட்டணி. சில கோடிகளை கொடுத்து காங்கிரஸை தன் பக்கம் இழுத்துக் கொண்டார் ஸ்டாலின் சார். ஆனால், உண்மையான காங்கிரஸ் நம்முடன் தான் நிற்கிறது. சிறுபான்மை மக்கள் நம் பக்கம் நிற்பதை பார்த்து திமுகவுக்கு பாஜகவுக்கும் நம் மீது கோபம்.

மேலும் அவங்க வீட்லயே விசில் சத்தம் சவுண்டா கேட்குது. அதனால்தான் நம் மீது அவர்களுக்கு காண்டு.
கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்லவில்லை. ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறேன். கரூர் விஷயத்தை பற்றி ஊருக்கே தெரியும். ஆனாலும் என் மீது பழி போட்டார்கள். அவ்வளவு பெரிய பழியை போட்டும் எடுபடவில்லை என்றவுடன் தான் ஜனநாயகனை முடக்கினார்கள். அப்போதும் நம்மை ஒன்றும் செய்ய முடியவில்லை. அடுத்ததாக பிரசாரம் செய்யவிடாமல் SOP யை வைத்து முடக்கப் பார்த்தார்கள். பின்னர் என்னை சுற்றியிருப்பவர்களை வைத்தே, இத்தனை வருடமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன்பாக அவதூறு பரப்ப வைத்தார்கள். நீங்கள் என்ன செய்தாலும் என்னை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது.
நம்ம வேட்பாளர்கள் யாரும் டாடாவோ பிர்லாவோ அம்பானியோ இல்லை. இது இந்தியாவே பார்க்காத தேர்தல். 50 வருடத்துக்கு ஒரு முறை நடக்கும் சம்பவத்தை போன்றது. மிஸ் பண்ணிடாதீங்க.
மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாவை கூட தொடும் தேவை எனக்கு இல்லை. என்னை எதிர்ப்பவர்களால் இப்படி சொல்ல முடியுமா? இரண்டரை வயது குழந்தையை திமுக நிர்வாகி கொல்கிறார். விளாத்திக்குளத்தில் கழிப்பறை இல்லாததால் பெண் அப்பாவியாக உயிரிழந்தாளே. போலீஸ் துறையை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்தீர்கள்? பொம்மை மாதிரி விளையாடினீர்களா? ஆட்சி முழுவதும் ஊழலில் நாறிப்போய் கிடக்கிறது. நடக்கப்போவது மாற்றத்துக்கான தேர்தல்.’ என்றார்.





