கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான காமராஜ் பவன் முன்பு சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணியில் கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு முடிந்து நீண்ட நாள் இழுபறிக்கு பின்னர் இன்று வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது.
அதில் சிங்காநல்லூர் தொகுதிக்கு இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளர் ஸ்ரீநிதி என்பவருக்கும், கவுண்டம்பாளையத்திற்கு மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சூரிய பிரகாஷ் என்பவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவன் முன்பு கூடிய அக்கட்சி தொண்டர்கள், வேட்பாளர்கள் இருவரையும் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், “கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்பதை டெல்லியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
இந்த வேட்பாளர்கள் இருவரும் கட்சிக்கு வந்து 2 வருடம் மட்டுமே ஆகிறது. 25 முதல் 40 ஆண்டுகளாக இந்த கட்சிக்கு உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி டெல்லிக்கும், ராகுல் காந்திக்கும் தவறான தகவலைச் சொல்லி இருக்கிறது. கட்சிக்கு தொடர்பில்லாதவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சிங்காநல்லூர் வேட்பாளர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளுக்குப் போய்விட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர்.

டெல்லிக்கு தவறான சொல்லி பணம் பெற்றுக் கொண்டு இந்தப் பட்டியல் தயாராகி இருக்கிறது. பட்டியலை தயாரித்தவர்கள் பணம் வாங்கிக்கொண்டு செயல்பட்டிருக்கின்றனர். கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் தயாரிக்கப்பட்ட பட்டியலில் இவர்கள் இரண்டு பேர் பெயர் இல்லை. ஆனால் திடீரென வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கின்றனர். சொந்த கட்சியினருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் இவர்கள் யார் என்றே தெரியாது. இந்த வேட்பாளர்களால் காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படும். தொண்டர்கள் மிகுந்த அதிருப்தி மற்றும் கொந்தளிப்பில் இருக்கிறோம்” என்றனர்.





