அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராகவும், காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மாநில தலைவராகவும் இருந்தவர் திருநாவுக்கரசர். திருச்சி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யாக இருந்த இவருக்கு கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீட் மறுக்கப்பட்டது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி தொகுதியில் இவரது மகன் எஸ்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார். அங்குள்ள தி.மு.க-வினர், ‘இந்தமுறை தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் ஆதரவாளரான மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தீர்மானம் போட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்.
இதனால், ‘திருச்சி கிழக்கு தொகுதியில் திருநாவுக்கரசர் களம் காணத்தான் தீர்மானம் போட்டிருக்கிறார்கள்’ என்று சொல்கிறார்கள். ஓன்று தனது மகனுக்கு சீட் வாங்க வேண்டும், அது முடியாவிட்டால் தனக்காவது சீட் வாங்கிவிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர், ‘நான் எம்.ஜி.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவன். எனக்கு எம்.எல்.ஏ ஆசையில்லை’ என்று பேசியிருக்கிறார்.
இந்நிலையில், இதுபற்றி விவர புள்ளிகள் சிலரிடம் பேசினோம்.
“திருச்சி எம்.பி-யாக இருந்த திருநாவுக்கரசர் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை. அதேபோல், திருச்சி தி.மு.க முக்கிய புள்ளியான அமைச்சர் கே.என்.நேருவோடு அணுசரணையாக நடந்துகொள்ளவில்லை. அதோடு, திருச்சி எம்.பி-யாக இருந்துகொண்டு திருச்சிக்கு எப்போதாவது வருவது, அப்போதும் பேட்டி மட்டும் கொடுப்பது என்று செயல்பட்டார். அதனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. திருச்சியில் ம.தி.மு.க துரை வைகோ வேட்பாளர் என்றதும் மயிலாடுதுறை தொகுதி வரை கேட்டு ஓய்ந்தார். இந்நிலையில், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து பதவி அனுபவித்து வந்த அவருக்கு, கடந்த இரண்டு வருடங்களாக பதவியில் இல்லாமல் இருப்பு கொள்ளவில்லை.

இந்நிலையில் தான், ஒரு மாதத்துக்கு முன்பு அவரது ஆதரவாளரான திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், ‘திருச்சி கிழக்கை காங்கிரஸூக்கு ஒதுக்க வேண்டும்’ என்று தீர்மானம் போட்டு கட்சி தலைமைக்கு அனுப்பினார். ஆனால், இன்னொருபக்கம் திருநாவுக்கரசருக்கு எதிர்நிலையில் உள்ள, திருச்சி முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் மகனான ஜோசப் லூயிஸூம் திருச்சி கிழக்கை கேட்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தனக்கு வாங்கிவிட வேண்டும் என்று திருநாவுக்கரசர் முனைப்புக் காட்டி வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால், திருச்சிக்கு வந்த அவர் பத்திரிகையாளர்களிடம், ‘அறந்தாங்கி தொகுதியில் தற்போது எனது மகன் ராமச்சந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டால் அவரையே வேட்பாளராக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை. எம்.எல்.ஏ அல்லது அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசையும் இல்லை. முன்பு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசிலும், பின்னர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும் அமைச்சராக இருந்துள்ளேன். எனவே, மீண்டும் அமைச்சர் ஆக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக ஆக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் உள்ளது’ என்று பேசினார்.

ஆனால், அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவரது மகனான எஸ்.டி.ராமசந்திரன், அங்குள்ள லோக்கல் தி.மு.க புள்ளிகளோடு இணக்கமாக போகவில்லை. அதோடு, ‘தி.மு.க-வுக்கு சாதகமான அந்த தொகுதியை இந்த தேர்தலில் தி.மு.க-வுக்கு ஒதுக்க வேண்டும்’ என்று தி.மு.க -வினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். தி.மு.க சார்பில் மணமேல்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்தி ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ-வும், ஆவுடையார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளருமான உதயம் சண்முகம், தேர்தல் பணிக்குழு மாநில செயலாளரும், மணமேல்குடி முன்னாள் ஒன்றிய சேர்மனுமான பரணி கார்த்திகேயன் ஆகியோர் சீட் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தான், திருச்சியில்,’எனக்கு எம்.எல்.ஏ ஆசையில்லை. என் மகனுக்கு கொடுங்கள்’ என்று தனது அபிலாஷையை வெளிப்படுத்தியிருக்கிறார். தன மகனுக்கோ அல்லது தனக்கோ சீட் கிடைக்கவில்லை என்றால், அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்பதால் யாரேனும் ஒருவருக்கு சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.. அதாவது, அவரது லாபி அறந்தாங்கி தொகுதியில் தனது மகனுக்கு சீட் வாங்க முயல்வது.

அது, அறந்தாங்கி தொகுதி தி.மு.க-வினரின் போராட்டத்தால் மகனுக்கு அந்த தொகுதி கிடைக்காமல் போனால், ‘எம்.பி சீட்டும் கொடுக்கவில்லை. எனக்கு எம்.எல்.ஏ சீட்டாவது கொடுங்கள்’ என்று சென்டிமென்டாக பேசி, திருச்சி கிழக்கை தனக்கு பெறும் முயற்சியை பிரம்மாஸ்திரமாக வைத்திருக்கிறார். அதற்காகத்தான் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து, ‘எனக்கு ஆசையில்லை. மகனுக்கு சீட் கொடுங்கள்’ என்று முதல் பாலை வீசியிருக்கிறார். விக்கெட் விழுதா அல்லது நோ பால் ஆகிறதா என்பதை பொறுத்து அடுத்த பாலை வீசுவார்” என்றார்கள்.
இந்த விவகாரம் குறித்து, தமிழநாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸிடம் பேசினோம்.
“திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியை காங்கிரஸூக்கு கேட்டு தீர்மானம் நிறைவேற்றி மேலிடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். திருநாவுக்கரசர் மட்டுமல்ல, எல்லாரும் தான் கேட்பார்கள். 37 பேர்களை நேர்காணல் செய்து, மேலிடத்துக்கு லிஸ்ட் அனுப்பியிருக்கிறோம். 37 பேர்களில் திருநாவுக்கரசர் பெயர் இருக்கிறதா என்பது கட்சி விவகாரம் என்பதால், அதுபற்றி வெளிப்படையாக சொல்ல முடியாது” என்றார்.
இறுதியாக, திருநாவுக்கரசரிடம் பேசினோம்.
“காங்கிரஸ் கட்சிக்கு திருச்சியில் ஏதாவது ஒரு தொகுதியை கேட்போம். ஆனால், நான் திருச்சி கிழக்கு தொகுதியை கேட்கிறேன் என்பது தவறான தகவல். நான்தான் எம்.எல்.ஏ தேர்தலில் நிற்கவில்லை என்று சொல்லிவிட்டேனே. என் மகன்தான் அறந்தாங்கி தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். பேச்சுவார்த்தை நடக்கிறது. அது முடிந்ததும், தெரியும். ஏன் அவருக்கு கிடைக்காமல் போக போகிறது?. என்னைப் பொறுத்தவரையில் நான் நிற்கவில்லை” என்றார்.
திருநாவுக்கரசரின் சீட் பெறும் ‘ஆடுபுலி ஆட்டம்’ என்னவாக போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!





