வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என்று கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். மநீம தேர்தலில் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கும் என்றும் பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலினை வாழ்த்துவோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
தேர்தலில் போட்டியிடாதது ஏன்? என்று விளக்கமளித்த கமல்ஹாசன், “இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காகத் தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். இது என்னுடைய முடிவு மட்டுமல்ல. கட்சியினுடைய முடிவு.
நீங்கள் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கூறினேன். தமிழ்நாட்டிற்கு நெருக்கடி வந்துள்ளது. நாட்டு நலனுக்கான போராட்டம் தான் இந்தத் தேர்தல். எனக்கு அரசியல் தொழில் அல்ல, கடமை.
தொண்டர்களின் உணர்வை புறக்கணிக்க முடியாது. புறக்கணிக்கவும் மாட்டேன். எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளம் அல்ல. முதல்வரும், துணை முதல்வரும் என்னுடன் நட்புணர்வோடு நடந்துகொண்டார்கள். என்னுடன் பயணித்தவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகு கமல்ஹாசனுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து பேசிய ஆர். எஸ். பாரதி, “முதல்வர் ஸ்டாலின் சார்பாக கமல்ஹாசனுக்கு நன்றி. திமுகவின் 2 கோடி தொண்டர்கள் சார்பிலும் கமல்ஹாசனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கலைஞரால் வளர்க்கப்பட்ட பிள்ளை கமல்ஹாசன்” என்று கூறியிருக்கிறார்.





