தமிழக வெற்றிக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு இன்று மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு, அவர்கள் பங்கேற்பதற்கு மட்டுமே அனுமதியும் அளிக்கப்பட்டிருக்கிறது.
நோன்பு திறந்த பிறகு சிறப்பு தொழுகையும் நடைபெற்றது. இந்தச் சிறப்பு தொழுகையில் விஜய்யும் கலந்துகொண்டார்.
இதன் பிறகு உரையாற்றிய விஜய் கொள்கையில் என்றைக்கும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் எனவும், பேசப்பட்டு வந்த கூட்டணி கணக்குகள் தொடர்பாகவும் பேசியிருக்கிறார்.
அவர், “நான் அரசியலுக்கு வந்ததிலிருந்து நிறைய வதந்திகள் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இவர் அந்த டீமைச் சேர்ந்தவர், இந்த டீமைச் சேர்ந்தவர்னு சொல்லிட்டு இருக்காங்க. ஆனா, இவர் எந்த டீமும் இல்லை. இவர் மக்களுடைய டீம்னு எல்லோருக்குத் தெரிஞ்சதுக்குப் பிறகு வேற என்ன அவதூறு பரப்பலாம்னு முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.
ஆனா, அது எதுவும் வொர்க் ஆகல. அதைத் தாண்டி, இவனை என்ன பண்ணலாம்ங்கிற முயற்சியிலதான் அந்தக் கூட்டணியில், இந்தக் கூட்டணியில் சேரப் போறார்னு பொய்யான பிரசாரத்தைப் பரப்பினாங்க.

இந்த நியூஸ் கேட்டு நீங்க குழம்பியிருப்பீங்க. நாங்க எப்போதும் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நம்ம தலைமையில்தான் ஆட்சி என்பது உறுதி.
நம்ம முதல் மாநாட்டுல சொன்ன மாதிரிதான் என்றைக்கும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் நம்பாதீங்க, இறைவனின் அருளால் நம்முடைய இலக்கை நம்மால் அடைய முடியும்” எனக் கூறியிருக்கிறார்.





