தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் சட்டசபை பதவிக்காலம் வருகிற மே, ஜூன் மாதங்களில் முடிவுக்கு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும். மேற்கு வங்கத்தில் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல் கட்டம் ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாவது கட்டம் ஏப்ரல் 29ஆம் தேதியும் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறும்.” எனத் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளன. அதன் முதல் கட்டமாக தலைமை செயலகத்திலுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
அரசு செலவில் அரசியல் விளம்பரங்கள் வெளியிடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உரிய ஆவணங்கள் இன்றி 50,000 ரூபாய்-க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்யப்படும்.
விமர்சனங்கள் கொள்கைகள், செயல்திறன் மற்றும் திட்டங்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும்; தனிப்பட்ட வாழ்க்கையை இழிவுபடுத்தக்கூடாது. ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு சார்பாக பக்கபலமாகப் பயன்படுத்தப்படக்கூடாது.
லஞ்சம், மிரட்டல், போலி வாக்காளர்கள், வாக்குச்சாவடிகளுக்கு அருகில் பிரச்சாரம் செய்வது போன்ற சட்டவிரோத செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் குறித்து அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒலிபெருக்கி அல்லது கூட்டங்களுக்கான அனுமதி பெற வேண்டும். அமைதியைப் பேணுவதற்கும் போக்குவரத்தை நிர்வகிப்பதற்கும் காவல்துறை அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
வாக்காளர்களை செல்வாக்கு செலுத்தக்கூடிய நிதி உதவிகள், புதிய திட்டங்கள், உள்கட்டமைப்பு உறுதிமொழிகள் அல்லது தற்காலிக நியமனங்கள் போன்ற அறிவிப்புகள் வெளியிடக்கூடாது.
அரசு வாகனங்கள், விடுதிகள், டாக் பங்களாக்கள் மற்றும் பொது இடங்கள் உள்ளிட்ட அரசு வசதிகள் அனைத்து கட்சிகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும்.





