கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து ஐ.எம்.விஜயன் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அதில் அவர் கூறுகையில், “கேரளாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் என் மீது பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஐ.எம்.விஜயன் தேர்தலில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பில் எல்லாரும் கேட்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை
எனக்கு முதன்முதலில் 1986-87 காலக்கட்டத்தில் கே.கருணாகரன் (காங்கிரஸ்) முதல்வராக இருந்தபோதுதான் போலீஸில் வேலை கிடைத்தது. அதன்பிறகு கேரளா போலீஸ் அணிக்காக விளையாடினேன். பின்னர் 1991-ல் மோகன் பகான் அணிக்குச் சென்றேன். 1993-ல் சந்தோஷ் டிராபி வென்றபோது எனக்கு டபிள் பிரமோஷன் கிடைத்தது. அப்போதும் கருணாகரன் சார்தான் முதலமைச்சராக இருந்தார். நான் கொல்கத்தா அணியில் இருந்ததால் பதவி உயர்வை ஏற்கவில்லை. 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் கேரளா போலீஸில் இணைய வந்தேன்.
அப்போது ஸ்போர்ட்ஸ் கவுன்சில் தலைவராக ரசா இருந்தார். என்னிடம் ‘ஏன் மீண்டும் போலீஸில் சேர வேண்டும்?’ என்று கேட்டார்கள். நான் ‘சேர வேண்டும்’ என்று சொன்னேன். இரண்டு ஆண்டுகள் செவன்ஸ் கால்பந்து விளையாடிவிட்டு பிறகு போலீஸில் சேர முடிவு செய்தேன். அப்போது கொடியேரி பாலகிருஷ்ணன் (சி.பி.எம்) உள்துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் மனு எழுதி கொடுத்தபோது, ‘என்ன, போலீஸைப் பார்த்து பயந்து ஓடிவிட்டாயா?’ என்று கிண்டலாகக் கேட்டார். நான் ‘இல்லை சார், அப்போது எனக்கு வீடு இல்லை, அதற்காகத்தான் போனேன்’ என்று சொன்னேன்.
2011-ல் நான் எஸ்.ஐ ஆக போலீஸில் சேர்ந்தேன். பின்னர் மரடோனா கேரளா வந்தபோது அன்றைய முதல்வராக இருந்த உம்மன் சாண்டி எனக்கு இரட்டைப் பதவி உயர்வு அளித்தார். அதன் பிறகு கோவிட் காலத்தில், நான் முதல்வர் பினராயி விஜயனிடம் சென்று எனக்கு ஏ.சி (உதவி கமிஷனர்) ஆக பதவி உயர்வு கிடைத்தால் உதவியாக இருக்கும்’ என்று கேட்டேன். அவர் ‘பார்க்கலாம்’ என்று சொன்னார். அவர் சொன்னது எனக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. பின்னர் எனக்கு ஏ.சி பதவி உயர்வு கிடைத்தது. எனக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது பா.ஜ.க ஆட்சியில். என்னைப் பொறுத்தமட்டில் காங்கிரஸ், சி.பி.எம், பா.ஜ.க ஆகிய மூன்று கட்சிகளும் என்னுடன் உண்டு. ஒரு குறிப்பிட்ட கட்சி என்று சொல்லி என்னால் நிற்க முடியாது. கொல்கத்தாவில் இருக்கும்போது சிலர் என்னை தேர்தலில் போட்டியிட வைக்க முயன்றனர். இப்போது மூன்று வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடி அனுப்பிய ஒருவர் டெல்லியில் இருந்து வந்திருந்தார். நானே நேரில் சென்று அவரை சந்தித்து, சேர்ந்து காலை உணவு சாப்பிட்டோம். அவர் என்னிடம் ‘தேர்தலில் நிற்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘இல்லை சார், நான் தேர்தலில் நிற்கவில்லை’ என்று சொன்னேன். அதுபோன்று மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி என்னை அழைத்து, ‘நிச்சயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும்’ என்று சொன்னார். எனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை எனக்கூறினேன்.

எனக்கு மக்களின் இந்த அன்பு போதும். எனக்கு எந்தக் கட்சியுடனும் தனிப்பட்ட பிணைப்பு கிடையாது. எனக்கு எல்லாரும் வேண்டும். ஏனென்றால் நான் ஒரு தேசிய முகம். கேரளாவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள கால்பந்து ரசிகர்கள் என்னை நேசிக்கிறார்கள். அதுவே எனக்குப் போதும். எல்லாரும் போன் செய்து கேட்டுக்கொண்டே இருப்பதால், இதை அனைவருக்கும் சொல்லவே உங்களை அழைத்தேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் நான் சுரேஷ் கோபியிடமும் சொன்னேன், எல்லாரிடமும் சொல்கிறேன், ‘நீங்கள் எனக்கு ஒரு மேல்சபை எம்.பி பதவி கொடுத்தால், விளையாட்டை மேம்படுத்த அந்தப் பதவியைப் பயன்படுத்திக் கொள்வேன்.
அப்படி இல்லாமல் ஒரு கட்சியில் சேர்ந்து நிற்க எனக்கு விருப்பமில்லை. எனக்கு எல்லாரும் வேண்டும்” என்றார்.





