தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.
இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு வாய்ப்பு இல்லை என்றால், பத்து சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்ய சபா சீட்டும் தேர்தலுக்குப் பின்பு கொடுப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.
அதேபோல் தி.மு.க தரப்புடனும் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. தி.மு.க தரப்பில் ஒற்றை இலக்க தொகுதியும், ராஜ்ய சபா சீட்டும் தருவதாகச் சொல்லி உறுதி கொடுத்தனர். ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை தங்கள் அணிக்குள் கொண்டுவர கடுமையாக முயற்சி எடுத்த நிலையில்தான், யாரும் எதிர்பார்க்கா வண்ணம் இன்று காலை அறிவாலயத்தில் முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் பிரேமலதா.
இது குறித்து தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன்வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் ராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் என்று சொல்லியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என்கிற யோசனையில் தலைமை இருந்தது. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச் மாதத்தில் நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க-விற்கு ஒரு சீட் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வந்த வேளையில், வரும் மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற உள்ள பரப்புரை பொதுக் கூட்டத்தில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை மேடையேற்றவும், அதற்கான அழைப்பிதழை வரும் 23ஆம் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க தலைவர்கள் பிரேமலதா விஜயகாந்தை நேரில் சந்தித்துக் கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் அ.தி.மு.க முகாம் மூலம் செய்யப்பட்டது.
இந்த விவரங்களை தி.மு.க தரப்பு அறிந்து கொண்ட பிறகு, அடுத்த கட்ட மூவ் செய்ய ஆரம்பித்துள்ளது” என்றனர்.
தி.மு.க தரப்பில் நம்மிடம், “திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மூலம் தே.மு.தி.க தரப்பை உடனடியாக தொடர்பு கொண்டுள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸ் தரப்பு தி.மு.க-வுக்கு குடைச்சல் கொடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு செக் வைக்கும் விதமாகவும் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்த முடிவெடுத்தது தி.மு.க. தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உடன் 18ம் தேதி இரவு பேச்சுவார்த்தை நடத்தினார் கனிமொழி.
ஏற்கெனவே இரண்டு முறை பிரேமலதா விஜயகாந்த் உடன் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

18 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம், தி.மு.க கூட்டணிக்கு தே.மு.தி.க-வை வரவழைக்க சம்மதம் பெற்று, அந்தச் செய்தியை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தொகுதி எண்ணிக்கை மற்றும் பிற விஷயங்களை முதல்வரின் மருமகன் தரப்பு கையில் எடுத்துள்ளது. அதன்படி தே.மு.தி.க-வுக்கு 9 தொகுதிகள் முதல் 12 தொகுதிகள் வரை வழங்க ஒப்புக்கொண்டனர். ராஜ்ய சபா சீட் வாங்கினால் பத்து தொகுதிகளை கொடுத்துவிட்டு, ஒரு ராஜ்ய சபா சீட்டை வரும் மார்ச் மாதமே வழங்க தி.மு.க முன்வந்தது.
மற்றொருபுறம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவும் இரவோடு இரவாகப் பேசி, கூட்டணி டீலிங்கை ஃபைனல் செய்துவிட்டார்” என்கின்றனர்.

எல்லாம் ஓகே என்றதும், 19-ம் தேதி காலையில் அண்ணா அறிவாலயத்திற்கு தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமதா விஜயகாந்த்தை வரவழைத்து கூட்டணியில் இணைத்துள்ளனர்.
ஏற்கெனவே தி.மு.க கூட்டணியில் உள்ள பல கட்சிகள் கூடுதல் எண்ணிக்கையில் தொகுதிகள் கேட்டு வரும் நிலையில், புதிதாக தி.மு.க கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க-விற்கு 9 முதல் 12 தொகுதிகள் என பேசிமுடித்திருப்பது, கூட்டணியில் உள்ள பிற கட்சியினரை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
எங்களிடம் மட்டும் தொகுதியை குறைத்துப் பேசும் மருமகன் தரப்பு, தே.மு.தி.க-வுக்கு மட்டும் வாரி வழங்குவது நியாயமா? என்று புலம்பி வருகிறார்கள். தி.மு.க-வின் இந்த மூவர் அணிதான் இரவோடு இரவாகப் பேச்சுவார்த்தையை முடித்து சக்சஸ் செய்துள்ளார்கள்.





