தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற விவகாரம் திமுக – காங்கிரஸ் கூட்டணிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை முகப்பேரில் அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், “கூட்டணியில் குழப்பம் ஏற்படும் வகையில் கருத்துக்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். கட்சியின் அறிவுறுத்தலை மீறி பேசினால் காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்கும்” என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அகில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், ” திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என காத்திருக்கிறோம்.
திமுக-வுடன் சேர்ந்து வகுப்புவாத சக்திகளை எதிர்ப்போம்.
எங்களுக்கும் லட்சியங்கள் உள்ளன. கூட்டணி ஆட்சி குறித்து தெளிவான தீர்க்கமான பேச்சுவார்த்தை தேவை.
கூட்டணி தொடர்பான தனிநபர் கருத்து,காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கிடையாது.
திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து தவெக உடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், “உங்கள் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார்.





