மத்திய அரசின் சமையல் எரிவாயு விலை உயர்வு நடவடிக்கைக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.
மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் அறிவிப்பின்படி, நாளை (ஏப்ரல் 8) முதல் சமையல் எரிவாயு ரூ.50 உயருகிறது.
அதன்படி, உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 503லிருந்து ரூ.553-ஆகவும், உஜ்வாலா திட்டத்தின்கீழ் வராத பொதுப் பயனாளிகளுக்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் ரூ. 803-லிருந்து ரூ. 853-ஆகவும் விலை உயரும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், “நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?
“உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, சேடிஸ்ட் பாஜக அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?
வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு அமைந்திருக்கிறது.
மக்களே… அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!
ஒன்றிய பாஜக அரசே… தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!” எனப் பதிவிட்டுள்ளார்.





