ராமநாதபுரம் மாவட்ட அ.ம.மு.க சார்பில் ஜெயலலிதாவின் 77 பிறந்த தின பொதுக்கூட்டம், ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்தது. மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான முருகன் தலைமையில் நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ”அம்மா ஆட்சி பொறுப்பில் இருந்தவரை தி.மு.க-வால் ஆட்சி பொறுப்புக்கு வர முடியவில்லை. அவரது மறைவுக்கு பின் ஆட்சி பொறுப்புக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தனது நான்கரை ஆண்டுக்கால ஆட்சியை வியாபார நிறுவனத்தைப்போல் நடத்தினார். அதன் விளைவாக பாதிப்புக்குள்ளான மக்கள் தி.மு.க-வை ஆட்சி பொறுப்பில் அமர வைத்தார்கள்.
அதன் பின்னர்கூட அனைவரையும் அனுசரித்து செல்லாத எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் ஆளுமை செலுத்தக் கூடிய வட்டார கட்சியாக அ.தி.மு.க-வை மாற்றி விட்டார். இதனால் தமிழ்நாட்டில் வாழும் பல சமுதாய மக்கள் அவருக்கு எதிராக திரண்டிருக்கிறார்கள். அதன் காரணமாகத்தான் தென்பகுதிகளுக்குள் அவரால் வர முடியவில்லை. தலை காட்ட முடியவில்லை.


நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை எல்லாம் மக்களிடம் கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க-வோ, கொடுத்த வாக்குறுதிகளில் 80% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதற்கு காரணம் மத்திய அரசு நிதி தரவில்லை என பொய்யாக பழி போடுகிறார்கள். அண்ணா கொண்டு வந்த இரு மொழிக் கொள்கையினை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் இன்றைய கால மாற்றத்திற்கு ஏற்ப மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்தியை திணிப்பதாக தி.மு.க பொய் பிரசாரம் செய்கிறது.
தமிழகத்தில் நாள் தோறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. போதை மருந்து கலாசாரம் கொடிகட்டி பறக்கிறது. தமிழக போலீஸார் அதனை தடுக்க முடியாமல் திணறுகின்றனர். அதற்கு காரணம் போதை மருந்து விற்பனையில் ஈடுபடுவர்களுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமில்லாமல், தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே நேரடியாக அதில் ஈடுபடுவதுதான். இதனால் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களால் சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாதிப்புக்குள்ளாகும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது” என உரையாற்றினார்.





