அமைச்சர் கீர்த்தனா விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி மாணவிகளுடன் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ஆங்கிலத்தில் கேள்வி எழுப்ப, பள்ளி மாணவி பதில் அளிக்க தயங்கியதால், ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்த அறிவுறுத்தினார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் இந்த சம்பவம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆய்வு பணி என்பது காலம் காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும், அவர்கள் சம்பந்தப்பட்ட துறைக்கும், பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்வது என்பது மரபுதான். நான் இது தொடர்பாக விசாரித்தபோது கூட சொன்னார்கள்… சம்பந்தப்பட்ட அமைச்சர் இது தொடர்பான காணொளியை எடுக்கவில்லை.
அவர்களே தமிழ் வழி கல்வியில் படித்த சகோதரி தான். இன்று ஆங்கிலத்தில் நன்றாகப் பேசக்கூடிய தனித்திறமையை வளர்த்துக்கொண்டவர் தான். அரசியல் ஆளுமை உடையவர். அங்கிருந்த மற்றவர்கள் எடுத்த காணொளி தான் சர்ச்சையாக மாறியிருக்கிறது.

மற்றபடி ஆய்வு என்பது மரபு தான். அதனை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஒரு அக்கா ஸ்தானத்தில் தான் அந்த மாணவியிடம் அமைச்சர் பேசியிருக்கிறார். அதனைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று பதிலளித்திருக்கிறார்.





