நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் PTI-க்குப் பேட்டி அளித்திருக்கிறார். அதில், “தமிழகத்தில் ராகுல் காந்திக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
அவர் விஜய்யுடன் இணைந்து தேர்தல் பிரசாரம் செய்திருந்தால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தமிழகத் தேர்தலில் 180-190 இடங்கள் வரை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று காங்கிரஸ் உள்ளூர் மற்றும் அடிமட்டத் தலைவர்கள் பரிந்துரைத்தனர்.
இருப்பினும், ‘இந்தியா’ கூட்டணி மற்றும் தி.மு.க எங்களின் நீண்ட கால மற்றும் நம்பிக்கைக்குரிய கூட்டணி என்பதால், த.வெ.க சிறப்பாகச் செயல்படும் என்று தெரிந்தே தி.மு.க கூட்டணியில் தொடர தலைமை முடிவெடுத்தது.

எங்கள் கட்சித் தொண்டர்களும் வாக்காளர்களும் இதனால் அதிருப்தி அடைந்தனர், அதன் காரணமாகவே அவர்கள் த.வெ.க-வை நோக்கி நகர்ந்திருக்கின்றனர்.
மக்களின் இந்தத் தீர்ப்பு ஒரு மாற்றத்திற்கான தீர்ப்பு. எனவே, தமிழக மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு நாம் தலைவணங்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.





