தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியில் கிட்டத்தட்ட 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். அதிமுகவும் பாஜகவும் வலுவாக இருக்கும் தொகுதியில் ஆனந்த் எப்படி வெற்றிக் கொடியை நாட்டினார்?
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் கருணாநிதி தி.நகர் தொகுதியில் வென்றிருந்தார். அதிமுக – பாஜக சார்பில் போட்டியிட்ட தி.நகர் சத்யா வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றிருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக தொகுதிக்குள் அதிமுக சார்பில் சத்யாவும் பாஜக சார்பில் வினோஜ்.பி.செல்வமும் போட்டியிட வேலைகளை பார்த்து வந்தனர். தொகுதிக்குள் இருக்கும் பொதுப்பிரிவு மக்களின் வாக்குகள், தெலுங்கு மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் சத்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் வினோஜ் செல்வமும் அவருக்காக வேலை பார்த்திருந்தார். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ராஜா அன்பழகன் தொய்வான பிரசாரங்களால் வீக்கான போட்டியாளராகவே பார்க்கப்பட்டார்.
அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தெலுங்கு பேசும் மக்களை குறிவைத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் பிரசாரம் செய்ய அழைத்து வந்திருந்தனர்.

இன்னொரு பக்கம் தவெக சார்பில் புஸ்ஸி ஆனந்த் தொகுதிக்குள் ஆக்டிவாக பிரசாரம் செய்யவில்லை. விஜய் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் ஆனந்த் செல்ல வேண்டியிருந்தது. அதனாலயே ஆனந்தின் பிரசாரம் பாதிக்கப்பட்டது.
ஆனால், ஆனந்த்துக்கு ஆதரவாக ஒரு நாள் தொகுதிக்குள் விஜய் வலம் வந்தார். விஜய் அடித்த அந்த ஒரு ரவுண்டே தொகுதியை புஸ்ஸி ஆனந்துக்கு சாதகமாக மாற்றிவிட்டது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகள் பெருவாரியாக ஆனந்துக்கு விழவே கிட்டத்தட்ட 13000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.





