சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும்.
ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு வலுவான தொகுதியாக இத்தனை காலம் இருந்து வந்திருக்கிறது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மருத்துவர் எழிலன் நாகநாதன் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
அப்போது, பா.ஜ.க சார்பில் களமிறங்கிய, நடிகை குஷ்புவை 32,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இம்முறையும் திமுக சார்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் அவரே களம் இறக்கப்பட்டார்.
திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன்.
தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் அரசின் கொள்கை முடிவுகளில் தரவு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியமானவர்.
தொகுதியிலும் சரி, செயல்பாட்டளவிலும் சரி எழிலன் நாகநாதனுக்கு நல்ல பெயரையே நிலவி வந்தன. ஆனால், இத்தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுக சார்பாக பா. வளர்மதி, தவெக சார்பாக ஜேசிடி பிரபாகர், நாதக சார்பாக களஞ்சியம் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இவர்களில், தவெக சார்பாக களமிறக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர் 15141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
விஜய் அரசியல் வருகை இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. அவரின் வருகை தமிழகமெங்கும் புதிய அலையை உருவாக்கியிருக்கிறது. அந்த ஃபேக்டரும் இத்தொகுதியில் பெருமளவு கைகொடுத்திருக்கிறது.

தவெக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கில் களமிறக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர் மூத்த அரசியல்வாதியாவார். ஜேசிடி பிரபாகர் இம்முறை தனது ஏழாவது சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறார்.
1980-களிலேயே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், தமிழக அரசியலின் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டவர். அதிமுக சார்பாக ஆறு முறை சட்டமன்ற தேர்தலை சந்த்திருந்தவர் கடந்த 2023-ல் அதிமுகவிலிருந்து விலகினார். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவரும் இவர்.





