அரசியல் கட்சிகள் தொடங்கி மத்திய, மாநில அரசுகள் வரை, பெண்கள் மீதான தங்கள் `அக்கறை’யை உள்பூச்சாக தேர்தல் ஆதாயத்துடனேயே இணைப்பது வழக்கம். தற்போது அது, நாடாளுமன்றத்திலேயே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருப்பது நாட்டுக்கே அவலம். பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க அரசு நாடாளுமன்றத் தொகுதிக் கணக்குகளுடன் முடிச்சிட, அது தோல்வியடைந்துள்ளது.
2029 பொதுத்தேர்தல்கள் முதல் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான சட்டத் தொகுப்பு, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தின் 334A பிரிவின்படி, தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்பட்ட பிறகே இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரும் என்ற வரை யறையை ஏற்படுத்தி, மத்திய பா.ஜ.க அரசு இதில் உள்ளரசியல் செய்தது.
33% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேறு பல வழிமுறைகள் இருந்தும், இதைத் துருப்பாக்கி, தொகுதி மறுவரையறையின் மூலம் தன் கட்சிக்கு செல்வாக்குள்ள மாநிலங்களில் அதிக தொகுதிகளைப் பெற முயன்றது பா.ஜ.க அரசு.
ஆனால், பெண்கள் நலனுக்கு இணையானது மாநிலங்கள் நலன். எனவே, தொகுதி மறுவரையறைக்கான வடிவத்தில் மாநிலங்களுக்கு இடையே சமநிலை பேணப்பட வேண்டியது அவசியம். அதுதான், இந்த மசோதா மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பிலும் நிரூபணமாகி உள்ளது.
வாக்கெடுப்பில், பா.ஜ.க கூட்டணியால் மசோதாவுக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற முடியாமல் போயுள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக 298 வாக்குகளும், எதிராக 230 வாக்குகளும் பதிவாக, அது தோல்வியடைந்துள்ளது.
பிரதமர் மோடி, `மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்கள் இட ஒதுக்கீட்டை விரும்பவில்லை’ என்று தெரிவித்திருந்தார். ஆனால், இந்த மசோதாவை தொகுதி வரையறையுடன் இணைக்காமல் இருந்திருந்தாலே அது நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பது, இப்போது நாடே அறிந்த உண்மையாகி இருக்கிறது.
33% இட ஒதுக்கீடு மசோதா, பெண்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வின் முக்கிய முன்னெடுப்பு. அதன் வரையறைகளின்படி, இட ஒதுக்கீட்டுக்கான தொகுதிகள் சுழற்சி முறைக்கு உட்பட்டவை. அதாவது, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட தொகுதிகள், பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி அடிப்படையில் மாற்றப்படும்.
இந்த இட ஒதுக்கீடு, 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். பின்னர், நீட்டிக்கப் படவோ, மாற்றியமைக்கப்படவோ செய்யலாம். அப்போது, 33% என்பது 50% ஆக அதிகரிக்கப்படலாம். கூடவே, இந்த 33%க்குள் எஸ்சி, எஸ்டி பெண்களுக்குத் தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் உள்ளன.
`பெண்களுக்கு அரசியல் அதிகாரம் தரப்பட வேண்டும். அதே நேரம், பெண்களை அரசியல் கருவிகளாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்ற குரலுடன், மீண்டும் தொடங்குவோம் 33% இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை.
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்





