தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே திருமண்டகுடியில் திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வந்தது. இந்த சர்க்கரை ஆலையை அதன் நிர்வாகம் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடியை வழங்கவில்லை. 2018ம் ஆண்டு இந்த ஆலை நிர்வாகம் ஆலையை நிரந்தரமாக மூடியது. மேலும் ஆலை நிர்வாகம், விவசாயிகளின் பெயரில் மோசடியாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் ரூ.300 கோடி வரை கடன் பெற்றுள்ளது.
ஆலை நிர்வாகம் மூடப்பட்டும் கடனை திருப்பி தர கட்ட சொல்லி விவசாயிகளுக்கு வங்கிகள் அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள் சிபில் உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். விவசாயத்திற்காக வேறு எந்த கடனும் வாங்க முடியாத சூழலில் சிக்கியுள்ளனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மூடப்பட்ட திருஆருரான் சக்கரை ஆலையை கால்ஸ் என்ற நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. அவர்களிடமிருந்து வங்கி கடனுக்கான பணத்தையும், நிலுவை தொகையையும் பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து தஞ்சாவூர் திலகர் திடலில் நடந்த பொதுகூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் வந்தார். அப்போது, விவசாயிகள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினர். மேலும் ஸ்டாலினுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கருப்பு கொடிகளை கைப்பற்றிய போலீஸார் கரும்பு விவசாயிகளை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் ரூ.115 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம் மோசடியாக விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன்களை எந்த நிபந்தனையுமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும். ஆலை நிர்வாகத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்ததும், எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் எங்கள் எதிர்ப்பை காட்டினோம்” என்று தெரிவித்தனர்.





