இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெறும் 8-வது கணக்கெடுப்பு இன்று (ஏப்ரல் 1, 2026) தொடங்குகிறது. உலகிலேயே மிகப்பெரிய இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரலாற்றிலேயே முதல் முறையாக முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்படவுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டம் (ஏப்ரல் – செப்டம்பர் 2026) வரை நடைபெறுகிறது. இந்த கணக்கெடுப்பின்போது, வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடைபெறும். இதில் வீடுகளின் நிலை, குடும்ப வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும்.
முதல் முறையாக, மக்கள் தங்களின் விவரங்களை இணையதளம் வாயிலாக தாங்களாகவே பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு வசதி வழங்கப்படுகிறது. வீடு வீடாக கணக்கெடுப்பாளர்கள் வருவதற்கு 15 நாட்களுக்கு முன்பே இந்த வசதி தொடங்கும்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2027) பிப்ரவரியில் தொடங்கும். இதில் தனிநபர்களின் மக்கள்தொகை, கல்வி, இடம்பெயர்வு மற்றும் சமூக-பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும். அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு தீர்மானத்தின்படி, இரண்டாம் கட்டத்தில் சாதி வாரியான தகவல்களும் சேகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 16 முதல் மே 15 வரை கர்நாடகா, ஒடிசா, அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, லட்சத்தீவு, மிசோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களிலும், மே 1 முதல் மே 30 வரை ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், சத்தீஸ்கர், அருணாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெறும்.
இந்த கணக்கெடுப்பிற்காக மத்திய அரசு ரூ.11,718.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கணக்கெடுப்பாளர்கள் காகிதங்களுக்குப் பதிலாக ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்யேக மொபைல் செயலி மூலம் தரவுகளைச் சேகரிப்பார்கள்.

இந்தச் செயலி மற்றும் சுய-கணக்கெடுப்பு இணையதளம் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான தரவுகளைப் பெறுவதற்கும், கணக்கெடுப்புப் பணிகளை விரைந்து முடிக்கவும் இந்த டிஜிட்டல் முறை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





