‘தூத்துக்குடியில் நண்பர் நிற்கிறார்’ என தன்னுடைய நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத்தை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய். கட்சித் தலைவரின் நண்பர் தங்களுடைய தொகுதியில் களமிறங்குவதை தூத்துக்குடி தவெகவினர் கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால், தூத்துக்குடியில் கனத்த மௌனமே நிலவுகிறது. காரணம் என்ன?
இதுசம்பந்தமாக தூத்துக்குடி தவெகவின் உள்விவகாரம் அறிந்த சிலரிடம் பேசினோம். ‘தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை குறிவைத்து அஜிதா ஆக்னல் கட்சி தொடங்கிய அன்றிலிருந்தே தொகுதிக்குள் வைட்டமின்களை இறக்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் கட்சி தலைமையும் அஜிதாவை ஊக்குவித்தது.
பொதுச்செயலாளர் ஆனந்தும் அஜிதாவின் பணிகளை அங்கீகரித்தார். ஆனால், பொதுச்செயலாளருக்கு நெருக்கமானவராகவும் தென்மாவட்டங்களில் செல்வாக்கனவராகவும் இருந்த சஜிக்கும் அஜிதாவுக்கும் ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் ஏகப்பட்ட முரண்கள். இதனால் சஜி தூத்துட்டியில் சாமுவேல் என்பவரை கட்சிக்குள் அழைத்து வருகிறார். மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கியும் தருகிறேன் என உறுதியும் கொடுக்கிறார். பனையூருக்கு சாமுவேலை அடிக்கடி அழைத்துச் சென்று பொதுச்செயலாளர் பரிச்சயமாக்கியும் விட்டார். அதிலிருந்து பொதுச்செயலாளர் அஜிதாவின் பணிகளை அவ்வளவாக கண்டுகொள்வதில்லை.

கட்சி நிகழ்ச்சிகளில் அஜிதா புறக்கணிக்கப்பட்டார். இடையில் சஜி இறந்து போகிறார். இனியாவது நிலைமை மாறுமென அஜிதா நினைத்தார். ஆனால், பொதுச்செயலாளர் சஜி அறிமுகப்படுத்திய சாமுவேலுக்கு ஆதரவாகவே நின்றார். அவருக்கே மாவட்டச் செயலாளர் பொறுப்பையும் முடித்துக் கொடுத்தார். இதனால்தான் தலைவரின் காரையே அஜிதா மறித்தார். அப்போதும் யாரும் கண்டுகொள்ளவில்லை. மாவட்டச் செயலாளர் பொறுப்பை வாங்கியதைப் போல சீட்டையும் வாங்கிவிட வேண்டும் என சாமுவேல் திட்டமிட்டார். மாவட்டத்தை விட்டுக் கொடுத்ததைப் போல சீட்டை விட்டுக் கொடுத்துவிடக் கூடாதென அஜிதா உறுதியாக நின்றார்.
தொகுதிக்குள்ளேயே இரண்டு கோஷ்டிக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கும். யாருக்கு சீட் கிடைக்கப் போகிறதென பார்ப்போம் என முறுக்கிக் கொண்டு நின்றனர். தலைவரின் காரையே மறித்ததால் அஜிதாவுக்கு சீட் இருக்காது என சாமுவேல் உறுதியாக நம்பினார். அதற்கேற்றார் போல 10-15 நாட்களுக்கு முன்பாக பனையூரிலிருந்து சாமுவேலுக்கு அழைப்பு வந்தது. சீட் கிடைக்கப்போகிறதென உற்சாகமாக கிளம்பிச் சென்றார் சாமுவேல். ஆனால் பொதுச்செயலாளர் கூப்பிட்டு ‘தளபதியின் நண்பர் தூத்துக்குடியில் நிற்கிறார். தளபதியே நிற்பதைப் போல நினைத்து வேலைப் பாருங்கள்’ எனக் கூற உடைந்தே விட்டார். இரண்டு மூன்று நாட்கள் சென்னையில் தங்கியிருந்து யார் யாரையோ பார்த்து பேசியும் எதுவும் வேலைக்காகவில்லை என்கிற விரக்தியில் ஊருக்கு திரும்பிவிட்டார்.

இன்னொரு பக்கம் அஜிதாவும் 10 நாட்களாக சென்னையில் முகாமிட்டு யாரையும் சந்திக்க முடியாமல் இன்று காலைதான் தூத்துக்குடிக்கு கிளம்பினார்’ என்கின்றனர் விவரமறிந்தவர்கள். மேலும் பேசுபவர்கள், ‘அஜிதா தொகுதிக்குள் படோபடமாக விளம்பரம் செய்து நிகழ்ச்சிகளை நடத்த மட்டும் ஒன்றரை ஆண்டில் ஒன்றுக்கும் மேல் வைட்டமின்களை செலவளித்திருப்பார். சாமுவேல் போஸ்டிங்குக்காக மட்டுமே முக்கியஸ்தர்களை பலமாக கவனித்திருக்கிறார். இருவரும் எக்குத்தப்பாக செலவளித்துவிட்டு இப்போது தலையில் துண்டோடு பாவமாக நிற்கின்றனர். ஸ்ரீநாத்துக்காக இவர்கள் வேலை செய்வார்களா என்பதே சந்தேகம்தான்’ என்றனர்.
நண்பருக்கு சீட் கொடுத்ததில் விஜய் மகிழ்ச்சி; ஆனால் களத்தில் வேலை செய்ய வேண்டிய நிர்வாகிகள் மகிழ்ச்சியாக இல்லையோ என்ற நிலை தான் இப்போது உள்ளது!





