தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் இருந்தது.
அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ” சட்டமன்றத்தில் ஒற்றை ஆளாய் போராடி இருக்கிறேன். நாங்கள் முன்வைத்த எங்கள் கோரிக்கைகளை திமுக அரசு பொருட்படுத்தவில்லை.
திமுக எங்களை புறகணித்துவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து என்னை வெளியேற்ற அரசு அதிகாரிகளே திமுகவிடம் கூறியிருக்கின்றனர்.
அமைச்சர்களின் ஆட்சி இங்கு நடக்கவில்லை. அதிகாரிகளின் ஆட்சி தான் திமுகவில் நடக்கிறது.
சமூக நீதிக்கு எதிரான தீய சக்திகளை திமுக உடன் வைத்திருக்கிறது.
கூட்டணி பேச்சின்போது பெரியண்ணன் பாணியில் எங்களை திமுக நடத்துவதை ஏற்க முடியாது.
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் ஒரு இடத்தை மட்டுமே ஒதுக்க முடியும் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் நாங்கள் திமுக கூட்டணியில் இருந்து அதிகாரப்பூரவமாக விலகுகிறோம்.
மண்டியிடாமல் மானத்தோடு செயல்படுவேன். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் தான் கூட்டணி வைப்போம்.
அதிமுக 3 இடங்கள் தருவதால் அந்தக் கூட்டணிக்கு நாங்கள் செல்வதாக வெளியாகும் செய்தி தவறானது.
பாஜக கூட்டணியுடன் செல்லமாட்டேன். கூட்டணியில் இருந்து விலக வேண்டாம் என்று பேசிய வைகோ, திருமாவளவன், வீரபாண்டியன், சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி.
அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று வேல்முருகன் தெரிவித்திருக்கிறார்.





