தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று பேராவூரணி. கடமைடை பகுதியான இத்தொகுதியில் திமுக-வைச் சேர்ந்த அசோக்குமார் சிட்டிங் எம்.எல்.ஏ.
திமுக-வை பொறுத்தவரை மீண்டும் அசோக்குமார் போட்டியிடுவதற்கு தலைமை ஓகே சொல்லி விட்டதாம். தொகுதிக்குள் பம்பரமாக சுழலும் அசோக்குமார் சுமார் ரூ 500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் செய்திருப்பதாக சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
ஆனாலும், தொகுதியை கைப்பற்ற முத்துமாணிக்கம், அன்பழகன், கார்த்திகேயன், அருள்நம்பி என திமுக-வில் சீட்டுக்கான ரேஸில் இருப்பவர்கள் சுணங்காமல் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் பேராவூரணியை குறி வைத்து காய் நகர்த்துவதாகவும் நெப்போலியன், செல்வப்பெருந்தகை மூலம் முயற்சிப்பதாகவும் சொல்கிறார்கள்.
அதிமுக-விற்கு சாதமான தொகுதிகளில் பேராவூரணியும் ஒன்று என்கிறார்கள். இதனால் அதிமுக-வில் வேட்பாளர் ரேஸில் பலர் உள்ளனர். இதில் ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோவிற்கு இபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதால் இளங்கோ தேர்தல் வேலையை தொடங்கி விட்டதாக கிசு கிசுக்கிறார்கள் ரத்ததின் ரத்தங்கள்.
இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் தரப்பில் பேசினோம், “முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தராசு மகன் கோவி.இளங்கோ. இவர் 2021 தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார். அப்போது அதிமுகவில் இருந்த வைத்திலிங்கம் சீனியரான முன்னாள் எம்.எல்.ஏ திருஞானசம்பத்தத்தை வேட்பளராக்கினார்.
சில காரணங்களால் திருஞானசம்பந்தம் 23,000 வாக்கு வித்யாசத்தில் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு கோவி.இளங்கோ, திருஞானசம்பந்தம், துரை.மாணிக்கம், பில்லங்குழி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் அணியில் இருந்தார் வைத்திலிங்கம்.

அந்த சமயத்தில் வைத்திலிங்கத்தின் கோபத்திற்கு ஆளாவோம் என்பதற்காக அதிமுகவில் இருந்தாலும் பலரும் கட்சி உள்ளிட்ட கூட்டங்களை நடத்துவதில் தயக்கம் காட்டினர். அப்போது, கோவி.இளங்கோ தைரியமாக முன்வந்து கட்சி கூட்டங்களை விமர்சையாக நடத்தினார்.
உறுப்பினர் சேர்க்கை, மக்கள் பிரச்னையில் உடன் நிற்பதுனு இந்த ஐந்து வருடமும் ஆக்டீவாக இருந்தார். கட்சி வளர்ச்சிக்காக பலமாக வேலை செய்தார். குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் பேராவூரணி எழுச்சி பயணத்தை ஒருங்கிணைத்தவர் இளங்கோ. இதில் பெரிய அளவில் கூட்டத்தை திரட்டியதால் இபிஎஸ்ஸிடம் கவனம் பெற்றார். அப்போதே தொகுதி உனக்குத்தானு இபிஎஸ் சொன்னாராம். இப்போது இபிஎஸ் சொன்ன வார்த்தை உறுதியாகி விட்டது. இளங்கோ தான் வேட்பாளர் என பரவலாக பேசப்படுகிறது. அவரும் தேர்தல் பணியை தொடங்கி விட்டார்.
அதே நேரத்தில் சீனியரான திருஞானசம்பந்தம் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எளிமையானவர் தொகுதி மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்க கூடியவர். சர்ச்சைகளுக்கு ஆளாகதவர். அனுபவம் வாய்ந்த இவர் தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு தூது விடுகிறார். கடந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டதால் இந்த முறை இபிஎஸ் என்ன முடிவெடுப்பார்னு தெரியலை. இதே போல் எழுச்சி பயணத்தின் போது சசிகலாவை உள்ளே விடாதீர்கள் என இபிஎஸ் வாகனத்தை நிறுத்தி பூங்கொத்து கொடுத்து உரக்க சொன்னவர் பில்லங்குழி செந்தில்குமார். அடிப்படையில் தொண்டராக கட்சிக்குள் வந்தவர். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக-வில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணியில் மாவட்டத் துணை தலைவராக இருக்கிறார்.

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவின் போது பெரிய அளவில் அன்னதான நிகழ்ச்சியை நடத்தினார். சசிகலா புதிய கட்சி தொடங்கியதை விமர்சித்து இவர் ஒட்டிய போஸ்டர் கட்சிக்குள் கவனம் பெற்றது. ஆங்கில புத்தாண்டு சமயத்தில் இபிஎஸ்ஸிடம் ஆசி வாங்க சென்ற செந்தில்குமாரிடம், சசிகலாவின் சொந்த மாவட்டத்தில் அவருக்கு எதிராக வெளிப்படையாக குரல் கொடுத்தற்கு தட்டி கொடுத்தாராம். அடிமட்டத்தில் இருப்பவர்களும், உயர்ந்த இடத்திற்கு வருவது அதிமுகவில் மட்டுமே நடக்கும். அந்த வகையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் செந்தில்குமார் விருப்ப மனு கொடுத்து காத்திருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் பா.ஜ.க-வும் தொகுதியை குறி வைத்துள்ளதாம். கருப்பு முருகானந்தம், பண்ணவயல் இளங்கோ ஆகியோரிடையே தொகுதியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. ஆனாலும் ஜெயிக்க கூடிய வாய்ப்புள்ள தொகுதியாக பேராவூரணி இருப்பதாக கட்சி ரகசியமாக எடுத்த கருத்து கணிப்பில் தெரிந்ததால் இபிஎஸ் கூட்டணி கட்சிக்கு தொகுதியை விட்டுத் தரமாட்டார்” என்றனர்.





