தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பேராவூரணி பேரூராட்சி திமுக சேர்மன் சாந்தி. இவரது கணவர் சேகர், திமுக நகர செயலாளர். சேகரின் தந்தையும், சாந்தியின் மாமனாருமான செல்வராஜ் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக-வின் முன்னாள் மாவட்ட துணை செயலாளர்.
கட்சியில் சீனியரான செல்வராஜ், பேரூராட்சியில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாகப் புகார் எழுந்தது. சேர்மன், தன் குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய ரத்த சொந்தங்களுக்கு பேரூராட்சியில் நடைபெறும் ஒப்பந்தப் பணிகளை ஒதுக்கக் கூடாது என்பதை மீறி கணவர் சேகருக்கும், செல்வராஜிக்கும் பல்வேறு ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கியதாகச் சொல்லப்படுகிறது.
குடும்பமாகச் சேர்ந்து பல்வேறு ஊழல்களைச் செய்ததாக இவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
பேராவூரணி பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க பிரமுகரான ஒப்பந்ததாரர் செந்தில்குமார் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, ஆறு வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க, பேரூராட்சி இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் பேரூராட்சியில் ஆய்வுகள் செய்தனர். இதையடுத்து பேரூராட்சி இயக்குநரக உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது என்கிறார்கள்.
பின்னர், செயல் அலுவலர் பழனிவேலுக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து அவரை டிரான்ஸ்பர் செய்தனர். இந்த நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சியில் நடைபெற்ற முறைகேட்டைக் கண்டித்து அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பேரூராட்சியில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் மனு அளித்தார்.
மேலும் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஆறு வார காலத்திற்குள் விசாரணை நடத்தி ஊழல் நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், நீலகண்டனிடம் நடத்திய விசாரணையில் ஊழல் நடந்ததற்கான ஆதாரங்களைக் கொடுத்தாகச் சொல்லப்படுகிறது. மேலும் பேரூராட்சியில் விசாரணை நடத்தி முறைகேடு நடந்திருப்பதை விஜிலென்ஸ் உறுதி செய்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனாலும் ஆளும் கட்சியினர் முறைகேடு புகாரில் சிக்கியிருப்பதால் மேல் மட்டத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார்கள்.
இதைதொடர்ந்து மீண்டும் நீலகண்டன், லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தவறு செய்திருக்கும் பட்சத்தில் நான்கு வாரத்திற்கு உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இதைதொடர்ந்து மீண்டும் விசாரணையில் இறங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், திமுக சேர்மன் சாந்தி, அவரது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியதாகச் சொல்கிறார்கள்.
இதையடுத்து கடந்த 11ம் தேதி செயல் அலுவலர் பழனிவேல், சேர்மன் சாந்தி, சேகர், செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல் சூடு பிடித்திருக்கும் நிலையில் திமுக சேர்மன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அரசியல் வட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை வைத்து பிரசாரத்தை முன்னெடுப்பார்கள் என்பதால் பேராவூரணி திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம். ”சாலை, பாலம், ப்ளீச்சிங் பவுடர், மண் அடித்தல் உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. சாந்தி, சேகர், செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து அதிகாரத்தின் மூலம் அழுத்தம் கொடுத்து ஊழல் செய்திருப்பதாகப் புகார் எழுந்தது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சேர்மன் சாந்தி, இவரது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ், செயல் அலுவலர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செயல் அலுவலர் பழனிவேல் முதல் குற்றவாளியாக வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என்றனர்.

இது குறித்து செல்வராஜிடம் விளக்கம் கேட்டோம். ”லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணையைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
எதிர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்ததால், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில் முறைகேடு நடந்திருப்பதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. சேர்மன் கூட்டுச் சதி செய்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. எங்கள் மீது போடப்பட்ட எப்ஐஆர் தவறு என உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்திருக்கும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.
முழுக்க இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடக்கும் சதி. நாங்கள் எந்தத் தப்பும் செய்யவில்லை, பேரூராட்சியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்பதைச் சட்டப்படி நிரூபிப்போம்” என்றார்.





