நேற்று, முன்னாள் ராணுவத் தளபதி நரவானே தனது ‘ஃபோர் ஸ்டார்ஸ் ஆஃப் டெஸ்டினி’ புத்தகத்தில் எழுதியிருந்த வரிகளை நாடாளுமன்றத்தில் படிக்க முயன்றார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
ஆனால், அதை கடைசி வரை படிக்கவே விடவில்லை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லாவிற்கு கடிதம் எழுதியுள்ளார் ராகுல் காந்தி. அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது…
“நேற்று ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானத்தில், நான் பேசும்போது, நான் பேச விரும்புவது எந்தப் பத்திரிகையில் இடம்பெற்றிருக்கிறது என்பதை கூறச் சொன்னீர்கள்.
இன்று நான் பேசும்போது, பத்திரிகையின் பெயரை குறிப்பிட்டேன்.
நாடாளுமன்றத்தின் வழக்கத்தின் படி, உறுப்பினர் பேச விரும்பும் ஆவணம் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அதில் இருக்கும் கருத்துகளுக்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது சரியாக செய்தாலே, அவைத்தலைவர் உறுப்பினரை அந்த ஆவணத்தைப் படிக்க அனுமதிக்க வேண்டும். அதன் பிறகு, அதற்கான பதிலைத் தருவது அரசின் பக்கம் சென்றுவிடுகிறது. அத்துடன் அவைத்தலைவரின் பொறுப்பும் முடிந்துவிடுகிறது.
திட்டமிட்டு தடுக்கப்படுகிறது
ஆனால், என்னை அவையில் பேசவிடாமல் தடுப்பது வழக்கத்தை மீறுவதாக அமைகிறது. மேலும், தேசிய பாதுகாப்பு குறித்து ஒரு எதிர்க்கட்சித் தலைவராக எனக்குப் பேச உள்ள உரிமையை திட்டமிட்டு தடுப்பதாக அமைகிறது.
ஜனாதிபதியின் உரையில் தேசிய பாதுகாப்பு முக்கிய பகுதியாக இருந்தது. அது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.
மதிப்பிற்குரிய அவைத்தலைவராக, எதிர்க்கட்சி உறுப்பினர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரின் உரிமையையும் அவையில் பாராபட்சமின்றி காப்பது உங்களது கடமையாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஒவ்வொரு உறுப்பினரும் பேசுவது நம் ஜனநாயகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும்.

நாடாளுமன்ற வரலாற்றிலேயே…
அடிப்படை ஜனநாயக உரிமையை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக, அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் உரையின் மீது எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதைத் தடுக்க அவைத் தலைவர் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்.
இது நமது ஜனநாயகத்தின் மீது விழுந்த கறை. அதற்கான கடும் எதிர்ப்பை நான் தெரிவித்துக் கொள்கிறேன்”.







