சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்திருந்தார். அரசு நிகழ்வில் விஜய்யின் திரைப்பட பாடல் ஒலிக்கப்பட்டது, அமைச்சர்களுக்கு நடுவே அமர்ந்திருந்த கட்சியின் பவர் சென்டர் என விழாவில் நிறைய ஹைலைட்டான சம்பவங்கள் நடந்திருந்தது.
சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கப்படும் என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே வந்துவிட்டார். அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் முதல் வரிசையில் இடமிருந்தும் அவர் கடைசியில் போய் அமர்ந்திருந்தார்.
அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷூடன் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் எல்லாரும் வன்னியரசுக்கு வணக்கம் வைத்துவிட்டு முதல் வரிசையில் அமர்ந்து கொண்டார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 நிமிடம் முன்பாக அமைச்சர் ஆனந்த் வருகை தந்தார். வந்தவுடனேயே அமைச்சர்களுக்கான இடத்தில் வன்னியரசு பின்வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்து பதறிவிட்டார். உடனே, ‘சார், நீங்க முன்னாடி வாங்க…’ என கனிவாக கூறி வன்னியரசை இரண்டாவது வரிசையில் அழைத்து அமரவைத்து மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு சென்றார். ‘எவ்வளவு வேலைகள் இருந்தாலும் சின்னச்சின்ன விஷயங்களை கூட கவனிப்பதுதான் பொதுச்செயலாளரின் மிகப்பெரிய ப்ளஸ்…’ என கூட்டத்திலிருந்த மா.செக்கள் அவர்களுக்குள்ளாக பேசி பெருமிதப்பட்டுக் கொண்டனர்.
திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ பல்லவிக்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. ‘தமிழ் வெற்றிக் கொண்டான்’ என குழந்தைக்கு பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறார். கைக்குழந்தையோடு வந்திருந்த அவரிடம் உடல்நலத்தை விசாரித்த அமைச்சர்கள், தமிழ் வெற்றிக் கொண்டானை கொஞ்சி தீர்த்தனர். ஸ்டேடியத்தின் வாயிலிலிருந்தே குழந்தையை ஆதவ்தான் கையில் ஏந்தி விளையாட்டு காட்டிக் கொண்டே வந்தார். போக்குவரத்துத்துறை அமைச்சர் தாய் மாமன் கொடுக்குறேன் வாங்கிக்கோ… என குழந்தையின் கையில் சில ரூபாய் நோட்டுகளை செல்லமாக கொடுத்தார். மீசையை முறுக்கியபடி வந்த வி.எஸ்.பாபுவும் குழந்தைக்கு கொஞ்ச நேரம் வேடிக்கை காட்டினார்.
அமைச்சர்களுக்காகவும் அதிகாரிகளுக்காகவும் அமைக்கப்பட்டிருந்த இருக்கை வரிசையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும் கட்சியின் மிக முக்கிய பவர் சென்டருமான விஷ்ணு ரெட்டியும் வந்து அமர்ந்திருந்தார். அதனாலயே அமைச்சர்களும் அதிகாரிகளும் கொஞ்சம் பார்த்து பார்த்து குசுகுசுவென்றே பேசிக் கொண்டனர்.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்ட நிகழ்வு காவல்துறையின் நிகழ்வு. காவல்துறையே அத்தனை விவகாரங்களையும் திட்டமிட்டு நடத்துகிறது. மாநிலத்தின் டிஜிபி முதற்கொண்டு உச்சப்பதவியில் இருக்கும் அதிகாரிகள் பலரும் விழாவில் கூடியிருந்தனர். அப்படி காவல்துறை நடத்தும் விழாவுக்கும் முதல்வர் விஜய் தன்னுடைய தனியார் பாதுகாவலர் மூசாவுடனேயே வந்ததை காவல்துறையின் உயரதிகாரிகளே அவ்வளவாக ரசிக்கவில்லை. உடன் வந்த பாதுகாவலர் ஓரமாகவும் நிற்காமல் முதல்வர் அரசு மரியாதையை ஏற்கும் போதும், காவலர்களுடன் ஜீப்பை ஓட்டுகையிலும் பின்னாடியே வந்து நின்றார். இதெல்லாம் அதிகாரிகளை ஏகத்துக்கும் கடுப்பாக்கியது. ‘இனிமே இப்படித்தான் போல…’ என மைண்ட் வாய்ஸில் மட்டுமே அவர்களால் பேசிக்கொள்ள முடிந்தது.
விழாவின் நிறைவாக காவல்துறையினர் ட்ரம்பட் மியூசிக் வாசிக்கையில், நடைமுறைப்படி வாசிக்க வேண்டிய இசைக் கோர்ப்புகளை வாசித்து முடித்துவிட்டு அரசு விழா என்பதை மறந்து விஜய்யின் சிங்கப்பெண்ணே, ஆளப்போறான் தமிழன் பாடல்களையெல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டனர். முதல்வரிடம் உயரதிகாரிகள் ஐஸ் வைத்து காரியம் சாதிக்க இப்படியொரு புதிய வழியா என பத்திரிகையாளர்கள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் டிஜிபி மகேஷ் குமார் சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தேர்வாகியிருக்கும் காவலர்களைச் சந்தித்து உத்வேகமளிக்கும் வகையில் பேசி பணிநிமித்தமாக சில முக்கிய அறிவுரைகளையும் வழங்கினார்.





