2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜகவுக்கு கோவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் கோவையில் பாஜகவுக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தமுறை கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த முறை கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இங்குதான் பிரச்னை வெடித்துள்ளது. கோவை பாஜகவின் முகமாக முன்பு வானதி சீனிவாசன் இருந்தார். அண்ணாமலை வந்த பிறகு கோவையில் கோலோச்சுவது யார் என்று அவர்களிடையே பனிப்போர் வெடித்தது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை தொகுதியைக் குறிவைத்து அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவரும் காய் நகர்த்தினார்கள். பாஜக தலைமை அண்ணாமலையை டிக் செய்தது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக வானதி தன் சிட்டிங் தொகுதியான கோவை தெற்கு தொகுதிக்குக் குட்பை சொல்லிவிட்டு, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கோவை வடக்கு தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.

பாஜக, அதிமுக இரண்டு தலைமைகளிலும் பேசி வடக்கு தொகுதியை ரிசர்வ் செய்து வைத்துள்ளார்.
அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், கோவையில் வடக்கு தொகுதி மட்டுமே எஞ்சியுள்ளது. அதைக் கைப்பற்ற இருவருக்கும் மியூஸிகல் சேர் போட்டி நடந்து வருகிறது.

பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏ மற்றும் கடந்த சில மாதங்களாக அங்கு பணியாற்றி வருவதால், வடக்கு தொகுதி தனக்குதான் என்று வானதி உறுதியாக உள்ளார்.
அங்கு ஏற்கெனவே வடவள்ளி, கணபதி, சாய்பாபாகாலனி என்று பகுதி வாரியாக நிர்வாகிகளை நியமித்து வானதி பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
தனக்கு சீட்டை உறுதி செய்ய டெல்லி மேலிடம் மூலம் வானதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். மறுபக்கம் அண்ணாமலையோ, “கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நான் கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டேன். அதற்குட்பட்ட கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் இருந்து அதிக வாக்குகள் கிடைத்தன.

எனவே தனக்குதான் சீட் வழங்க வேண்டும்” என்று அண்ணாமலை கேட்கிறார்.
இதில் பாஜக தலைமை முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. அதனால் அண்ணாமலை அப்செட்டாகியுள்ளார்.
சென்னையில் நேற்று பியூஷ் கோயலைச் சந்தித்தபோது தன் வருத்தத்தைப் பதிவு செய்த அண்ணாமலை செய்தியாளர்களிடம், “நான் யாரிடமும் சீட் கேட்கவில்லை’’ என்று கூறி சென்றார்.
இன்னும் ஒரு படி மேலே சென்று தனக்கு சீட்டே வேண்டாம் என்று டெல்லிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த அரசியல் டெல்லியில் மட்டுமல்லாமல் கோவை களத்தையும் கொதிக்க வைத்துள்ளது. கோவை பாஜகவினர், “அண்ணாவா.. அக்காவா.. யார் முக்கியம்” என்று சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.





